மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!
சம்பா சாகுபடிக்காக மேட்டூரில் தண்ணீர் திறப்பு: சி.எம். விஜய் வருகைக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் வர உள்ள நிலையில், மேட்டூர் அணைப் பகுதி முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் பெருமளவில் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரள்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முதலமைச்சரின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, மேட்டூர் அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பிரதமரின் வருகையின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இணையான வகையில், முதலமைச்சர் விஜய்க்காக 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு வருகிறது. அணைப் பகுதி, ஹெலிபேட், முக்கிய சந்திப்புகள், முதலமைச்சரின் பயண வழித்தடங்கள் என அவர் செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்... விரைவில் திறக்கப்படும் மேட்டூர் அணை... எப்போது தெரியுமா?
மேற்கு மண்டல ஐ.ஜி., சேலம் சரக டி.ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேட்டூரிலேயே முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, முதலமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஹெலிபேட் தளம் தொடங்கி, அவர் செல்லும் சாலை முழுவதும் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அணை வளாகத்தைச் சுற்றிலும் பிரம்மாண்டமான இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.
சம்பா சாகுபடிக்காக சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற உள்ள தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு, இவ்வளவு பிரம்மாண்டமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாக உளவுத்துறையின் கூட்ட நெரிசல் தொடர்பான எச்சரிக்கையே கூறப்படுகிறது.
டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு உள்ளிட்ட எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்படும் இரும்புத் தடுப்புகளுக்கான பணிகளுக்கு மட்டும் சுமார் நான்கரை கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல், தற்போது அரசு வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம், தாமதமானாலும் சம்பா சாகுபடிக்காக காவிரி நீர் திறக்கப்படுவது டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் முதலமைச்சர் விஜய்யின் சில நிமிட நிகழ்ச்சிக்காக மேட்டூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!