எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!
5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக முதல்வர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், முதல்வர் விஜய்யும் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இதில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் கடந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: 7-வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் எங்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? தூய்மை பணியாளர்கள் கேள்வி!
இந்த வழக்கில், தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் முதல்வர் விஜய் சார்பில் தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் அந்த தொகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, வெங்கடாஜலபதி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் உத்தரவு இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயமும் முக்கியம்; விமான நிலையமும் முக்கியம்! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!