என்ன ஆச்சு?... ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த சி.எம். விஜய்...!
முதலமைச்சர் விஜய் ஆழ்வார்பேட்டை வந்திருப்பதை அறிந்த மக்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் அங்கு திரண்டனர்.
தமிழக முதல்வர் விஜய் நேற்று சென்னையின் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஸ்கின் கேர் மருத்துவமனைக்கு திடீரென சென்றது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு பின்னர் தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் சிகிச்சை பெற்றாரா, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாரா அல்லது மருத்துவமனை தொடர்பான ஏதேனும் ஆய்வுப் பணிக்காக சென்றாரா என்பது குறித்தும் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. எனவே, மருத்துவமனைக்கு சென்றதன் உண்மையான காரணம் குறித்து தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, முதல்வர் விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். நூற்றுக்கணக்கானோர் கூடி முதல்வர் விஜயை பார்த்து ஆரவாரத்துடன் கையசைத்தனர். இதனை பார்த்த விஜயும் உற்சாகத்துடன் அவர்களை நோக்கி கையசைத்தார். இந்தக் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மருத்துவமனைக்கு திடீர் வருகை தந்த விஜய், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில், இன்று மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக சென்னையில் இரண்டாம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் 750 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளின் சேவையை இன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்தப் பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இரண்டாம் கட்ட மின்சாரப் பேருந்து திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன.
சென்னையில் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்த 750 மின்சாரப் பேருந்துகள், தாழ்தள வசதியுடன் குளிர்சாதன வசதி கொண்டவையாக உள்ளன. ஆலந்தூர், சென்ட்ரல் வொர்க்ஷாப்-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகள் மூலம் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலந்தூர் பணிமனை இதற்காக ரூ.30.43 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு, மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜிங் மற்றும் பராமரிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, நேற்று சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் முதல்வர் விஜய் பங்கேற்றிருந்தார். சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பரந்தூரில் முன்மொழியப்பட்ட பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகவும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார். மேலும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு விரைவு, டீலக்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் 'வெற்றிப் பயணம்' திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டப்பேரவை பணிகள், முக்கிய அரசு அறிவிப்புகள் மற்றும் இன்று தொடங்கப்பட உள்ள 750 மின்சாரப் பேருந்து சேவை என பரபரப்பான அரசு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில், முதல்வர் விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஸ்கின் கேர் மருத்துவமனைக்கு திடீரென சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.