ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!
இரு நகரங்களிலும் மெட்ரோ திட்டத்துக்கான நிலம் தொடர்பான சர்வே பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் சாதகமான திருப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்கள் தொகை குறைவாக இருப்பதாக கூறி இரு நகரங்களின் மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ள நிலையில், புதிய கணக்கெடுப்பு முடிவை வைத்து மீண்டும் அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மாநில அரசிடம் வழங்கியது.
அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த முன்மொழியப்பட்டது. மொத்தம் ரூ.22,100 கோடி மதிப்பிலான இந்த திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டன.
இதையும் படிங்க: மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு! மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் அதிர்ச்சி!
ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டங்களில், இரு நகரங்களின் மக்கள் தொகை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதனால் கடந்த ஆண்டு நவம்பரில் திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
இதையடுத்து, திட்ட அறிக்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 25-ம் தேதியும் மத்திய அரசு திட்டங்களை நிராகரித்தது.
மெட்ரோவுக்கு பதிலாக கோவை, மதுரையில் பிரத்யேக பஸ் வழித்தடங்களை உருவாக்கி, பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் எனப்படும் பி.ஆர்.டி.எஸ். திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் மத்திய வீட்டு வசதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதனால் கோவை, மதுரை மக்களிடையே மெட்ரோ திட்டம் குறித்த எதிர்பார்ப்பு சற்று குறைந்தது. தமிழக பட்ஜெட்டிலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெளிவான அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய கணக்கெடுப்பு மூலம் கோவை, மதுரை நகரங்களின் தற்போதைய மக்கள் தொகை குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்கும் என்பதால், மெட்ரோ திட்டங்களுக்கு மீண்டும் சாதகமான சூழல் உருவாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு நகரங்களிலும் மெட்ரோ திட்டத்துக்கான நிலம் தொடர்பான சர்வே பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய மக்கள் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கோவை, மதுரையில் மெட்ரோ ரயிலின் அவசியத்தை விளக்கி மத்திய அரசிடம் தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது தடைபட்டுள்ள இரு மெட்ரோ திட்டங்களுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் புதிய வாய்ப்பை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு! மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் அதிர்ச்சி!