"ஜனவரி 1 முதல் அரை மீசை பாரதி..." ... சிரித்துக்கொண்ட ஆர்.எஸ். பாரதியை கலாய்த்த மாணிக்கம் தாகூர்...!
அவரை அரைமீசையுடன் பார்க்கவே எனக்கு வருத்தமாக இருக்கும். எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ, சில நேரங்களில் அதுவே நடந்து விடுகிறது.
விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியதாவது: ஆர்எஸ் பாரதி அவர்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் "அரைமீசை பாரதி" என்று அழைக்கப்படுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட அகங்காரத்திற்கும் ஆணவத்திற்கும் மக்கள் தக்க பதிலை அளித்திருக்கிறார்கள். மக்கள் அளித்த தீர்ப்பையும், அவர்கள் பதிவு செய்யும் வாக்குகளையும் முதலில் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். "அரைமீசை எடுக்கிறேன், ஒரு மீசையை எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார். ஆனால், அவரை அரைமீசையுடன் பார்க்கவே எனக்கு வருத்தமாக இருக்கும். எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ, சில நேரங்களில் அதுவே நடந்து விடுகிறது.
அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அரைமீசை அவருக்கு பொருத்தமாக இருக்காது. மீசை என்பது பெரிய விஷயம் என்று நினைக்க வேண்டாம். நம்மை விட அழகான பலரும் மீசை இல்லாமல்தான் இருக்கிறார்கள். போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மின்வாரியத்தைச் சுற்றியும் பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் மக்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த 30 நாட்களாக யார் நிர்வாகத்தை நடத்தினார்கள், எப்படிச் செயல்பட்டார்கள், அதன் விளைவாக என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இந்த அரசு நேர்மையான அரசாக இருக்க வேண்டும் என்பது முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் நோக்கமாக உள்ளது. அந்த நேர்மைக்காக ஒரு விலையை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, நிலைநிறுத்தப்பட்டுள்ள அமைப்பை சீர்குலைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் மக்களுக்குத் தெரியும். மக்கள் இதை புரிந்துகொள்ளக் கூடியவர்கள்.
இதையும் படிங்க: "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!
முதலமைச்சரின் நல்ல நோக்கத்தையும், அவர் செயல்படுத்த விரும்பும் மாற்றங்களையும் மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் என்பது தேர்தல் வரும் போது தெரியும். அதற்கு முன்பாக யாரும் கணிப்புகளை உறுதியாகச் சொல்ல முடியாது. தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, நேர்மையான ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, நீண்ட காலமாக நிலவி வரும் அமைப்புகளை உடைத்து மாற்றத்தை உருவாக்கி வருகிறது. அதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்ட ஒரு குழு அமைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாடு பல துறைகளில் இருந்து வருகிறது. அது ஒப்பந்ததாரர்களாக இருக்கலாம், அரசியல்வாதிகளாக இருக்கலாம் அல்லது அந்த அமைப்புக்குள் பணிபுரிபவர்களாக இருக்கலாம். அந்த அமைப்பை சுத்தப்படுத்தும் போது ஆரம்பகட்ட சிரமங்கள் இருப்பது இயல்பு. உலகின் எந்த அமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்தும்போது இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனை ஏற்றுக்கொண்டு சரிசெய்து முன்னேற வேண்டும்.
மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் இரண்டு முக்கிய காரணங்களுக்காக வாக்களித்தார்கள். ஒன்று, நேர்மையான ஆட்சி அமைய வேண்டும். இரண்டாவது, பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த இரண்டுமே மக்கள் மனதில் முக்கியமான பிரச்சினைகளாக இருந்தன. அந்த இரு நோக்கங்களையும் அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா, அந்த திசையில் அரசு பயணிக்கிறதா என்பதைத்தான் மக்கள் கவனிக்கிறார்கள். அந்த திசையில் முன்னேற்றம் இருப்பதாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதற்கான பயணத்தில் பல தடைகள் வரலாம். ஆனால் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும். அரசாங்கமும், அமைச்சர்களும் அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், அந்தத் துறையில் தேவையான மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
இதையும் படிங்க: திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!