2006-ல் கோட்டை விட்டதை 2026 - ல் பிடிக்க மாஸ்டர் பிளான் ... திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்...!
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை முன்னெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் தேர்தலில் எளிதில் வெற்றி பெறக்கூடிய 125 தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தொகுதிகளை கேட்கும் காங்கிரஸன் நெருக்கடியை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்பது ஒரு பக்கம் இருக்க, பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி கணக்கில் முக்கிய மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே கூட்டணி தலைமையான திமுகவிற்கு எதிராக காங்கிரஸில் .போர்குரல் எழுந்து வருவது அதிகரித்து வருகிறது. தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸை பயன்படுத்திக் கொள்ளும் திமுக மற்ற நேரங்களில் உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என சமீப காலமாக காங்கிரஸார் பேசி வருவதை பார்க்க முடிகிறது. கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி கூடுதல் தொகுதி மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை பகிரங்கமாக பொதுவெளியில் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸின் ஆலோசனை கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: "உதயநிதி மீதான என் நம்பிக்கை..." - முதல்வர் பேச, பேச கண் கலங்கிய துணை முதல்வர்...!
நீண்ட காலமாக திமுக கூட்டணியில் பயணித்து வரும் காங்கிரஸ் இடையில் 2014 தேர்தலுக்கு மட்டும்தான் கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் மீண்டும் 2016 தேர்தலுக்கு ஐக்கியமான காங்கிரஸ் அப்போதிலிருந்து தற்போதுவரை திமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2006 தேர்தல் போல 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பியதாக கூறப்படுகிறது.
2006 தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த தேர்தலில் திமுக வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனி பெரும்பான்மை இல்லாமல் போனது. காங்கிரஸ் கொடுத்த ஆதரவுதான் திமுக ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது. அந்த சூழலிலும் கூட அமைச்சரவையில் பங்கு கேட்காமல் டெல்லி மேலிடம் கோட்டை விட்டது. இந்நிலையில் வரும் தேர்தலிலும் 2006 தேர்தலை போன்று கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறதாம். முதற்கட்டமாக காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு சாத்தியமாகும் தொகுதிகள் என 125 தொகுதிகளை கண்டறிய சொல்லி மேலிட பொறுப்பாளரிடமிருந்து நிர்வாகிகளுக்கு உத்தரவு வந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் தொகுதிகளே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் சில நிர்வாகிகள் குறைப்பட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஒதுக்குவதும் கதர்களை அதிருப்தியில் தள்ளி இருப்பதாக சொல்கிறார்கள். ஆகையால் வரும் தேர்தலில் எதிர்க்கட்சி பலமாக இருக்கும் தொகுதிகளை புறந்தள்ளிவிட்டு மற்ற தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "வாக்காளர் பட்டியலில் வடமாநில தொழிலாளர்கள்"... திமுகவினருக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட கே.என்.நேரு...!