நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!
டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம், அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் குற்றவியல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்தார். அப்போது கெஜ்ரிவால் தரப்பினர், நீதிபதி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகக் கூறி வழக்கை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிபதி அந்த மனுவை நிராகரித்த நிலையில், சமூக ஊடகங்களில் நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவுகள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி வழக்கிலிருந்து நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தானாகவே விலகிக் கொண்டார். பின்னர், தன்மீது அவதூறு பரப்பியவர்கள் மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இந்த மனு நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தர் துதேஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: மொத்தம் 42 விமானங்கள் க்ளோஸ்! ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு பெரிய நஷ்டம்!
நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அவர்கள் அனைவரும் நான்கு வாரங்களுக்குள் தங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவதூறு தொடர்பான ஆவணங்களின் நகல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் மீது அவதூறு பரப்புவது கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகும் என்பதை இந்த நோட்டீஸ் மீண்டும் நினைவூட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தரப்பில் இதுதொடர்பாக இன்னும் விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!