பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் அதிரடி... தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம்? நாடு முழுவதும் எதிர்பார்ப்பு!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அடுத்த வாரம் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த வாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (FCRA Amendment Bill) ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. தொடக்கத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக லோக்சபா மற்றும் மாநிலங்களவையின் நடவடிக்கைகள் பலமுறை பாதிக்கப்பட்டன. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தடியடி சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு அவைகளும் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
இருப்பினும், அந்த பரபரப்பான சூழலிலும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா – 2026 மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – 2026 ஆகிய முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
இதையும் படிங்க: மேற்கு ஆசிய போரால் சோகம்... 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழப்பு; பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
இந்த நிலையில், அடுத்த வாரம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா – 2026-ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதா அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், இந்த மசோதா மீது பாராளுமன்றத்தில் கடும் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்துடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதாவையும் மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அரசியலமைப்பின் 131-வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் நிறைவேற, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் என்பதால், அரசின் அடுத்தகட்ட அரசியல் வியூகம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு முக்கிய மசோதாக்களும் நாடு முழுவதும் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் மீது அனைத்து தரப்பினரின் கவனமும் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி! முடங்கியது பாராளுமன்றம்! ஆகஸ்ட் -3ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு!