ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!
சட்டசபை தேர்தலில் திமுகவிடம் ‘ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், உள்ளாட்சியில் 20 சதவீத ஒதுக்கீடு’ என்பதை ராகுல்காந்தி வலிறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி, தமிழகத்தில் தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே முடிக்கும் நோக்கில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
இக்குழு கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியது. காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என்று கிரிஷ் ஷோடங்கர் வலியுறுத்தினார். ஆனால் இதை எதிர்பார்க்காத ஸ்டாலின், ஷோடங்கருடன் மேலும் பேச மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் கடந்த 28-ம் தேதி டில்லியில், திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது ராகுல், ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், உள்ளாட்சியில் 20 சதவீத ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தினார். ஆனால் கனிமொழி, ஆட்சி பங்கு மற்றும் அதிக தொகுதிகள் கொடுக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு அதிகார மமதை! சும்மா விட முடியாது! எங்களுக்கு திருப்பி அடிக்க தெரியும்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!
இருப்பினும், 2021 தேர்தலில் கொடுக்கப்பட்ட 25 தொகுதிகளை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து கோரி வருகிறது. இதனால் கடந்த 1-ம் தேதி சென்னை வர திட்டமிட்டிருந்த காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. தொகுதி இறுதி செய்யப்படாததால், அவரது பயணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக – காங்கிரஸ் இடையே எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. விரைவில் கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தரப்பில் தொகுதிகள் இறுதியானால் உடனடி அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இழுபறி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்த விரும்பினாலும், ஆட்சி பங்கு மறுப்பு காரணமாக பதற்றம் நீடிக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு கட்சிகளும் உரிய முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இல்லையெனில் கூட்டணி வலுவிழக்கும் அபாயம் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: காங்கிரஸை நம்பாதீங்க! கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!