திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!
திமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ., விரைவில் அறிவிக்கப்படுவர் என கட்சிக்குள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள தி.மு.க. தலைமைக்கு, மூத்த நிர்வாகிகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற புதிய திட்டம் தற்போது கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் இரண்டு தொகுதிகளை மட்டுமே நிர்வகித்து வரும் நிலையில், சில மூத்த மாவட்ட செயலாளர்கள் நான்கு, ஐந்து மற்றும் ஆறு சட்டசபை தொகுதிகள் வரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவும், நிர்வாக கட்டமைப்பை பலப்படுத்தவும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து தலைமையிடம் வலுத்ததாக கூறப்படுகிறது.
இதற்காக தொகுதி வாரியாக கள ஆய்வு மேற்கொண்ட 36 பேர் கொண்ட குழு, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்த விரிவான அறிக்கையை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணிகளில் முழுமையான ஈடுபாடு காட்டாதவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!
இதன் அடிப்படையில் சுமார் 34 மாவட்ட செயலாளர்களை மாற்றுவது குறித்து தலைமை ஆலோசித்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
ஆனால், தற்போது இந்த திட்டம் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பல தொகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில மூத்த மாவட்ட செயலாளர்கள் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர்களை மாற்றினால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு செல்லக்கூடும் என்றும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், மாவட்ட செயலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் தற்காலிக மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரும் குரலும் கட்சிக்குள் தொடர்ந்து வலுத்து வருவதால், இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைமை இறுதியாக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் பரபரப்பு... திமுக GENZ ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய குவிந்த போலீஸ் படை... காத்திருந்த மெகா ட்விஸ்ட்...!