×
 

“Mr.விஜய் சட்டப்பேரவைக்கு வாங்க வச்சிக்கிறேன்...” - முதலமைச்சருக்கு நேரடி சவால் விட்ட திமுக Ex. அமைச்சர்...!

Mr.CM, Mr.CM என்றைக்காவது தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் மக்களின் பிரச்சனையை தீர்க்க வந்துள்ளீர்களா? தமிழக முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு சரமாரி கேள்வி

சட்டசபைக்கு வாருங்கள் திமுக கொறடாவாக மீதி அங்கு வைத்துக் கொள்கிறேன்... அமைச்சர் எ.வ.வேலு முதல்வர் விஜய்க்கு சவால் தவெக அரசுக்கு பவர் கொடுத்தது திமுக என்றும் மக்களின் பவரை எடுத்தது தவெக என்றும் எ.வ.வேலு  கடும் விமர்சனம்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முத்தமிழறிஞரமான கருணாநிதி அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சரும், திமுக கொறடாவுமான எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட கழக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000- த்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்! திமுக மேலிடம் அதிர்ச்சி!

விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 500 கோடி மதிப்பீட்டிற்கு மேல் பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டதும், ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு கருதி மூன்று இடங்களில் மாவட்டத்தில் காவல் நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் அனைத்தும் கழக ஆட்சியில் தான் கிடைத்தது என   விரிவாக பட்டியலிட்டு பேசியவர் மாற்றம் மாற்றம் என்றும் கூறும் மக்கள் இனி எக்காலத்திலும் எவர் ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற திட்டங்கள் வரவே வராது என திட்டவட்டமாக கூறினார். 

திமுக கூட்டணியில் அனைத்து தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினரை நாங்கள் அனுப்பி பவர் கொடுத்ததால் தான் முதல்வர் விஜய் தற்போது ஆட்சி நடத்துவதாகவும் எங்களிடம் பவர் பெற்று தமிழக மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வரும் மின்சார பவரை பிடுங்கி வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர் தவெக அரசுக்கு பவர் கொடுத்தது திமுக என்றும் மக்களின் பவரை எடுத்தது தவெக என்றும் விமர்சித்தார்.

தமிழ்நாட்டு காமராஜர் அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஸ்டாலின் ஆகிய பல முதல்வர்களை இந்த தமிழ்நாட்டு மண் பார்த்துள்ளது என்றும் முதல்வர்களுக்கு மரியாதையும் மதிப்பும் தமிழகத்தில் உண்டு என்றும் ஆனால் நூறு சதவீதம் இல்லையென்றாலும் 25% ஏறமாட்டாரா என அனைவரும் உற்று நோக்குகிறார்கள் என்று விமர்சித்தார்.

கேமரா முன்பு டேக் எனக் கூறியவுடன் டயலாக் பேசுவது போல தற்பொழுது இவர் அரசியல் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு முதல்வர் மக்கள் நமக்கு புரிதல் இல்லாமலும் கவர்ச்சியில் மயங்கி வாக்களித்து விட்டார்கள் என்று கூறியதை சுட்டிக்காட்டி பேசிய முன்னாள் அமைச்சர் வேலு நல்லா வருது வேண்டாம் என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசியவர் சினிமா மாயை இல்லாமல் தமிழ்நாட்டிற்கு என்ன கொண்டுவந்துள்ளார் முதல்வர் என்று கடுமையாக சாடினார். சினிமா மூலம் கொள்கையை மக்களிடம் கொண்டு பரைசாற்றிய இயக்கம் திராவிட இயக்கம் தான் என்றும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் பாரா முகமாக இருந்ததால் சந்திலும் பொந்திலும் புகுந்து வீரமின்றி விஜய் வெற்றி பெற்றார் என்று மறைமுகமாக சாடினார்.

தொடர்ந்து பேசியவர் முதல்வர் விஜய் மொழிக்காக போராட்டம் நடத்தியது உண்டா? என்றும் சென்னை வெள்ளகாடாக இருந்தபோது சென்னை மக்களை சந்தித்ததுண்டா? என்றும் தமிழகத்தில் பல்வேறு பேரிடர்கள் வந்த பொழுது தமிழக மக்களை வந்து சந்தித்ததுண்டா? தொழிலாளர் பிரச்சினைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தது உண்டா? மக்கள் பிரச்சனைக்காக மறியல் போராட்டத்தில் எங்கேயாவது கலந்ததுண்டா?நீட் தேர்வுக்காகவும் அரசு அலுவலர்களின் துயருக்காகவும் என்றாவது குரல் கொடுத்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியவர் முழுக்க முழுக்க சினிமா தான் பிறகு வருத்தம் ஏன் என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசியவர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், குஷி, திருமலை,கில்லி, திருப்பாச்சி, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் என்ன வகை கேமரா பயன்படுத்தினார்கள், சண்டை பயிற்சியாளர் யார்? டான்ஸ் மாஸ்டர் யார்? என்பது மட்டும்தான் முதல்வர் விஜய்க்கு தெரியும் என்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்கு என்றாவது குரல் கொடுத்தது உண்டா என்றும்  கேள்வி எழுப்பியவர், Mr.CM என்றாவது தமிழ்நாட்டு பிரச்சனையை  தீர்க்க வந்துள்ளீர்கள்? என்றும் ஏன் கோபப்படுகிறீர்கள் என்றும், நீங்கள் செய்த தொழில் சினிமா என்றும், சினிமாவால் தான் வெற்றி பெற்றீர்கள் என்று கூறுவதால் ஏன் கோபப்படுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

விரைவில் டெல்லி செல்ல உள்ள முதல்வர் 100 நாள் திட்டப் பெயர் மாற்றப்பட்டுள்ளது மகாத்மா காந்தி பெயருக்கு மீண்டும் மாற்ற குரல் எழுப்புவாரா என்று கூறியவர் 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் 2023 24 நிதியில் 12698 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தமிழக மக்களுக்கு வழங்கியதை சுட்டிக்காட்டி பேசியவர் ஆனால் தற்பொழுது ஒன்றிய அரசு 3923 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளதாகவும் நிதி ஆயுக் கூட்டத்திற்கு செல்லும் தமிழக முதல்வர் 100 நாள் வேலை திட்ட நிதி குறித்து பேசி வாங்கி வாருங்கள் உங்களை நாங்கள் சபாஷ் என்று கூறுவோம் என்றும் கூறினார்.

சினிமா இமேஜால் வந்தவர் என்றால் உங்களுக்கு கோபம் வருதே, வாயில் வருகிறது என்று கூறுவதாகவும் வாயில் நல்லது மட்டும் வரட்டும் நாடு தாங்காது என்றும் கூறினார். திமுக தலைவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு 6 மாத காலம் பொறுத்து இருப்பதாகவும், சட்டசபைக்கு வாருங்கள் திமுக கொறடாவாக மீதி  அங்கு வைத்துக் கொள்கிறேன் என்று கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share