திமுக பலமிழந்து விட்டது! இதுதான் சரியான நேரம்! நிர்வாகிகளுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
''தி.மு.க., தன் பலத்தை இழந்து விட்டதால், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டால், அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்த பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தன் பலத்தை இழந்துவிட்டதால், அ.தி.மு.க. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த பழனிசாமி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தோல்விக்கான காரணங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
நிர்வாகிகள் சிலர், “கடைசி ஒரு வாரத்தில் விஜய் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னிலைக்கு வந்துவிட்டார். அவரை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நின்றது தவறு” என்று கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!
இதையடுத்து பேசிய பழனிசாமி, “சமூக வலைதள பிரசாரத்தால் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது உண்மைதான். ஆனால், தொடர்ந்து ஆட்சி நடத்த அது மட்டும் போதாது. ஆட்சி அமைந்த நாள் முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மின்வெட்டைத் தடுக்க முடியாமல் அரசு திணறுகிறது. அனுபவமில்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டோமே என மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ‘ரீல்ஸ்’ மோக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது” என்றார்.
மேலும், “கூட்டணியால்தான் தி.மு.க. பலமாக இருந்தது. தற்போது கூட்டணி இல்லாமல் தனித்து பலமிழந்து நிற்கிறது. நமக்கான கூட்டணி இன்னும் வலுவாக உள்ளது. எனவே, த.வெ.க. அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டால் மக்கள் ஆதரவை நிச்சயம் பெற முடியும்” என்று வலியுறுத்தினார்.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும், சமூக வலைதளங்களில் தீவிரமாகச் செயல்படும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது, வழக்கமாக வரும் மாவட்டச் செயலர்கள் பெரும்பாலானோர் வராதது கவனத்தை ஈர்த்தது. வராத சிலர் த.வெ.க.வில் இணையும் பேச்சு நடத்தி வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க.வின் எதிர்கால உத்திகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!