திமுக ஆலமரத்தை அசைக்க முடியாது: திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்!
திமுக ஆலமரத்தை எவராலும் அசைக்க முடியாது என்றும், கட்சியில் மூத்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் திருச்சியில் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் முழங்கியுள்ளனர்.
திமுக என்ற மாபெரும் அரசியல் பேரியக்கத்தை எந்தச் சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றும், கட்சியில் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில் வயது மூத்த முன்னோடிகளுக்குப் பதவி கிடைக்காது என்று எவரும் கவலைப்படத் தேவையில்லை, அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சியில் கூட்டாக முழங்கியுள்ளனர்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மத்திய, கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் அவசரக் கூட்டுச் செயற்குழுக் கூட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்டச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னோடிகள் திரளாகப் பங்கேற்றனர். திமுக தலைமை அறிவித்துள்ள உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகளை முன்னிட்டு, தலைமைக்கழகப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வேலுச்சாமி மற்றும் வேடசந்தூர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த விரிவான ஆலோசனைக் கூட்டம் அரங்கேறியது.
கூட்டத்தில் ஆவேச உரையாற்றிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "திமுக என்கிற கம்பீரமான ஆலமரத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்போதும் என்னையும் நேரு அண்ணனையும் 'பொன்னர் – சங்கர்' என்றே பாசத்தோடு குறிப்பிடுவார். எனக்கென்றால் அண்ணன் நேருவும், அவருக்கு ஒன்று என்றால் நானும், கழகத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் இருவரும் தோளோடு தோள் சேர்ந்து முன்னணியில் நிற்போம். ஆளுங்கட்சியாக இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களுக்கு திமுக என்றென்றும் ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழும். நேற்று நேரு அண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்ற அந்த 7 மணி நேரமும் நான் அவரோடு களத்திலேயே நின்றேன்; அந்த ஏழு மணி நேரத்தில் நான் பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நாம் எதிர்கொள்ளும் அரசியல் எதிரிகள் அப்பட்டமான பொய்யர்களாகவே இருக்கிறார்கள்; அத்தகைய பொய்களை நாம் வீரியத்துடன் துடைத்தெறிய வேண்டும்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!
டார்வின் கோட்பாட்டின்படி வலிமையாக இருப்பதால் மட்டுமே ஒரு உயிரினம் நிலைத்து வாழ்ந்துவிட முடியாது; மாறும் சூழலுக்குத் தகுந்தபடி தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினமே நீண்ட காலம் வாழும். அதுபோலவே, திமுகவும் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு களமாடுவதால்தான் இன்றும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகத் திகழ்கிறது. வரவிருக்கும் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் முழு பலத்துடன் உழைத்து வெற்றிக் கொடி நாட்ட வேண்டும். கட்சியில் இனி பொறுப்புக்கு யார் வந்தாலும் ஒற்றுமையுடன் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று சூளுரைத்தார்.
இதனைத் தொடர்ந்து உணர்ச்சிபொங்க உரையாற்றிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, "கழகத் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் திருச்சி மாவட்டத்தில் நாம் நூறு சதவீத வெற்றியைத் தொடர்ச்சியாக ஈட்டி வந்தோம். ஆனால், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மண்டலத்தில் ஏழு தொகுதிகளை நாம் எதிர்பாராதவிதமாக இழந்துவிட்டோம். இழந்த அந்தத் தொகுதிகளை மீண்டும் மீட்டெடுத்து கழகத்தின் வெற்றிக் கோட்டையாக மாற்றுவதுதான் நமது இலக்கு. அதற்காகத்தான் இந்த மறுசீரமைப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கட்சித் தலைமை வகுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி மாநகரத்திற்கு இனி ஒரே செயலாளர் என்ற பதவி கிடையாது; பகுதிச் செயலாளர்கள் மட்டுமே செயல்படுவார்கள். பல உட்கட்டமைப்பு மாற்றங்களை நமது தலைமை முன்னெடுத்துள்ளது. கட்சியில் வயது மூத்த முன்னோடிகளுக்கு இனி புதிய பொறுப்புகள் கிடைக்காதோ என்று யாரும் வேதனைப்படத் தேவையில்லை; களத்தில் உழைத்த அனைவருக்கும் தகுந்த பொறுப்புகள் வழங்கப்படும் என்று கழகத் தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முன்னோடிகளும் தொண்டர்களுமாகிய நீங்கள் இருந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும்; நீங்கள்தான் இந்த இயக்கத்தின் அச்சாணி. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றி காண்போம்; உங்களுக்காக நான் எப்போதும் முழு ஒத்துழைப்பையும் தருவேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!