மா. செ. எண்ணிக்கை உயர்வு.? பரபரப்பு அரசியல் களம்... திமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் இன்று காலை திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த முக்கிய கூட்டத்தில் கழக உயர்நிலை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் சமீபத்தில் கழகத்தில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் போன்றோரும் வருகை தந்துள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கழகம் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சியின் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பதவியில் இருந்த மாவட்டச் செயலாளர்களை மாற்றி, புதிய இரத்தத்தைச் செலுத்தும் வகையில் அமைப்புரீதியான மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. தற்போது உள்ள 78 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் புதிய அமைப்பை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் களப்பணிகளை இன்னும் தீவிரப்படுத்தி, தொண்டர்களுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கம் உள்ளது.கூட்டத்தில் கழக ஆக்கப்பணிகள், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் பின்னடைவுக்குப் பின்னர் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு அறிக்கைகள் மற்றும் மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: "CHENNAI DAY"..! கோடிக்கணக்கான கனவுகளை தாங்கும் தாய்... கனிமொழி MP பெருமிதம்.!!
நீண்டகாலமாகப் பதவியில் இருந்த மூத்த நிர்வாகிகளுக்கு மாநில அளவிலான உயரிய பொறுப்புகள் வழங்குவதுடன், இளைஞர்களுக்கு முக்கிய இடம் அளிக்கும் வகையிலான மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலினத்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளில் அதிகப் பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: "வஞ்சக வார்த்தை... முதல்வருக்கு பலவீனம்"..! மேகதாது பிரச்சனையில் தலையிட்ட அப்பாவு..!