களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு மக்களிடமிருந்து நேரடியாக கருத்துகளைப் பெறும் கருத்து கேட்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில், இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மிக முக்கியமான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில், பல்வேறு தரப்பினரைச் சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாகக் கேட்டறியும் நோக்கம் கொண்டுள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மகளிர் அமைப்புகள், மாணவர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கூட்டம் மூலம் மக்களின் உண்மையான தேவைகளையும் கனவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதே குழுவின் முதன்மை இலக்காக உள்ளது.
இதையும் படிங்க: எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட இந்த 12 உறுப்பினர்கள் கொண்ட குழு, ஏற்கனவே ஓசூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதேபோன்ற கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்தக் கூட்டங்களில் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, AI உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு தேர்தல் அறிக்கையில் இணைக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை... ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய அதிமுக..!