அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!
அதிமுக எங்கள் (திமுக) பங்காளி போன்றவர்கள் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை விவாதித்த அவர், அரசியல் நட்பு-பகை உறவுகளைத் தெளிவாக அடையாளம் காட்டிய முக்கியமான தேர்தலாக இதை வர்ணித்தார்.
“இந்தத் தேர்தல் நமக்கு பெரிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது. மிக விரைவில் மாற்றங்கள் நிகழும். திமுக யார் என்பதை நாங்கள் உலகுக்குக் காட்டுவோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். தேர்தல் கூட்டணியில் வெற்றி பெற்ற சிலர் தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணைவதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அவ்வாறு செய்ததைப் போலவே இவர்களும் நடந்துகொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து. இந்தத் தேர்தலை ‘வித்தியாசமான’ ஒன்றாகக் குறிப்பிட்ட பாரதி, “யாரும் விஜய் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் எப்படியோ வந்துவிட்டார். இந்த அதிசயத்தால் பலவீனமான அரசியல் சக்திகள் பலியாகிவிட்டன” என்று கூறினார். தமிழக அரசியலில் திடீர் எழுச்சியைப் பெற்ற தவெகவின் தலைவர் விஜய் பற்றிய இந்தக் கருத்து கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்தார் ஸ்ரீநிதி! கோவையில் தங்களை மேலும் பலப்படுத்தும் திமுகவின் மாஸ் மூவ்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகம், தேர்தலுக்குப் பின் திமுக-அதிமுக இடையே கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, “திமுக-அதிமுக கூட்டணி என்ற பேச்சே இல்லை. நாங்கள் அதிமுகவுடன் பேசவும் இல்லை, கூட்டணியும் வைக்கவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும், “அதிமுகவை தீண்டத்தகாத சக்தியைப் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. திமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் உலகின் மிகப் பெரிய தவறா? இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் உடைந்து பிரிந்தன. ஆனால் இப்போது இரு கட்சிகளும் ஒரே கருத்தில் இல்லையா?” என்று பதிலடி கொடுத்தார். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக உருவாகி ஏறத்தாழ 54 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இரு கட்சிகளும் ‘பங்காளி’ போன்ற உறவினர் என்று விவரித்த பாரதி, “அதிமுக திமுகவிலிருந்து சென்றவர்களின் கட்சிதான். கூட்டணி வைப்பதில் தவறில்லை” என்றார்.
தற்போது சட்டசபையில் இரு கட்சிகளும் ஒரே அணியில், ஒரே வரிசையில் அமர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “இது தொண்டர்களுக்கு திமுக-அதிமுக இணைந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த நிலைக்குக் காரணம் வேறு சில சக்திகள்தான்” என்று குறிப்பிட்டார். இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் எதிர்கால உத்திகள் மற்றும் எதிர்கட்சிகளுடனான உறவுகள் குறித்து புதிய விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இதையும் படிங்க: திமுக கொள்கையை தான் வழிமொழிகிறது தவெக..!! இவங்களால ஒன்னும் செய்ய முடியாது... தமிமுன் அன்சாரி தடாலடி..!!