கூட்டணி கட்சிகளிடம் திமுக ரகசிய பேச்சு! தொகுதிகள் குறைப்பால் அதிருப்தி! குழு அமைக்க தாமதமானது இதனால்தானா?
முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமைக்க உள்ள திமுக தொகுதி பங்கீட்டு குழு, பிப்ரவரி 22 முதல் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என திமுக அறிவித்து உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், திமுக தொகுதி பங்கீட்டு குழு விரைவில் அமைக்கப்பட்டு, பிப்ரவரி 22 முதல் தோழமை கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு முன்பே ரகசிய பேச்சுகள் நடத்தப்பட்டதாலும், பல கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்படுவதாலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.
திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், இந்த தேர்தலில் சில கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. ஆனால் எக்காரணம் கொண்டும் கூடுதல் இடங்கள் வழங்கக் கூடாது. திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்றனர். அதிகாரப்பூர்வ குழு அமைத்து பேச்சு நடத்தினால், தொண்டர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு கூட்டணி உடையும் அபாயம் உள்ளதால், ஸ்டாலின் குழு அமைப்பதை தாமதப்படுத்தியதாக தெரிவித்தனர்.
மூத்த அமைச்சர்கள் நேரு, வேலு மூலம் ரகசிய பேச்சுகள் நடந்துள்ளன. காங்கிரஸுடன் இன்னும் பேச்சு தொடங்கவில்லை. முஸ்லிம் லீக், ம.ம.க., கொ.ம.தே.க. ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் உறுதியாகியுள்ளன. வேல்முருகனுக்கு 1 தொகுதி (பண்ருட்டிக்கு பதிலாக நெய்வேலி கேட்டுள்ளார்), கருணாஸுக்கு 1 தொகுதி உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: 5 தொகுதி தர்றோம்!! ஆனால் உதயசூரியன்ல தான் நிக்கணும்! கமலஹாசனுக்கு திமுக நெருக்கடி! சிக்கலில் மநீம!
கடந்த தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 6 தொகுதிகள் பெற்று, தலா 2 இடங்களில் மட்டுமே வென்றன. எனவே இம்முறை தலா 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் மா.கம்யூ. மாநில செயலர் சண்முகம், “திமுக தனித்து போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வென்றீர்களா? ஏன் அதிக இடங்கள் கேட்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பி முரண்டு பிடித்துள்ளார். நேரு, “நீங்களே பேசி கூடுதல் இடம் பெற்றுக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.
ம.தி.மு.க.வுக்கு “உதயசூரியன் சின்னத்தில் நின்றால் 6 தொகுதிகள், தனிச்சின்னத்தில் 3 தொகுதிகள்” என திமுக தரப்பு கூறியுள்ளது. ஆனால் முதன்மை செயலர் துரை ஒப்புக்கொள்ளாததால் இழுபறி நீடிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்க தொகுதிகள் எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக “7க்கு மேல் வாய்ப்பில்லை” என உறுதியாக இருப்பதால் அங்கும் பேச்சு இழுபறியில் உள்ளது.
கூட்டணி இறுதியாகாததால் காங்கிரஸுடன் பேச்சு தொடங்கவில்லை. இந்த இழுபறிகள் திமுக – கூட்டணி உறவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
இதையும் படிங்க: யாருக்கு எவ்வளவு தொகுதி? ஸ்டாலின் டேபிளுக்கு போன ரிப்போர்ட்! இறுதியானது திமுக தொகுதி பங்கீடு!!