×
 

நகராட்சி தலைவர் தேர்தல்: சங்கரன்கோவிலை தன்வசமாக்கியது திமுக..!!

சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளை கொண்டது. உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 9 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

திமுக சார்பில் உமா மகேஸ்வரி, அதிமுக சார்பில் முத்துலெட்சுமி ஆகியோர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ, சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் உமா மகேஸ்வரிக்கு 15 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துலெட்சுமிக்கு 15 வாக்குகளும் கிடைத்தன. இருவரும் சமநிலை அடைந்ததால் குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இதையும் படிங்க: நியாயமான தேர்தல்னா வெளிப்படைத்தன்மை இருக்கலாமே! முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி சரவணன், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தனது பதவியை இழந்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த ஜூலை 2ம் தேதி நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது. உமா மகேஸ்வரி மீது, மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்யத் தவறியதாகவும், தெரு விளக்கு அமைப்பது, சாலை அமைப்பது போன்ற பணிகளில் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 30 நகர்மன்ற உறுப்பினர்களில், 28 பேர் உமா மகேஸ்வரிக்கு எதிராக வாக்களித்தனர். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, எஸ்டிபிஐ மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் அடங்குவர். ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து இதை எதிர்த்து உமா மகேஸ்வரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதில் மீண்டும் 28 வாக்குகள் ஆதரவாக பதிவாக, தீர்மானம் நிறைவேறியது. இதனால், உமா மகேஸ்வரி பதவி இழந்தார். 

இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா, அதிமுக சார்பில் 26-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிட்டனர்.

நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் திமுக உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகளுடன் வெற்றி பெற்று நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டும் பெற்றார். இதன்மூலம் சங்கரன்கோவில் நகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவு, உள்ளூர் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுசல்யாவின் வெற்றி, திமுகவின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவரது தலைமையில், நகராட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல், சங்கரன்கோவில் நகராட்சியில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் புதிய தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள், புதிய தலைமையின் செயல்பாடுகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு! சிக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி... உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share