108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை!
தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் மற்றும் எம்.எம்.பூஞ்சி கமிஷன் ஆகியவற்றின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில், ஆளுநர் முதலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையும், இரண்டாவதாகத் தனிப்பெரும் கட்சியையும் (Single Largest Party) ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது விதி. பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் (Floor of the House) நிரூபிக்க வேண்டும்; ஆளுநர் மாளிகையில் அதைச் சோதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் கமிஷன் பரிந்துரைகள் தெளிவாக உள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018-ஆம் ஆண்டு கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் நிலவிய சூழலை அவர் தனது அறிக்கையில் உதாரணமாகக் காட்டியுள்ளார். அன்று காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து 116 இடங்களுடன் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், அப்போதைய ஆளுநர் 104 இடங்களைப் பெற்றிருந்த பாஜக-வைத் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைத்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!
தற்போது தமிழகத்திலும் அதே போன்ற சூழல் நிலவுவதால், 108 இடங்களில் வென்ற விஜயை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடனடியாக அழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளதைக் கவலையுடன் தெரிவித்துள்ள துரை வைகோ, ஆளுநர் விரைந்து முடிவெடுக்கத் தவறினால் அது மாநில உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும், மக்கள் தீர்ப்புக்கும் எதிரானது என்று எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜய்க்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், மதிமுக-வின் இந்த அறிக்கை ஆளுநர் மாளிகைக்கு மேலும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!