டாஸ்மாக் கடைக்கு போகாதீங்க அங்க ஒரிஜினல் சரக்கு இல்லை - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு...!
டாஸ்மாக் கடைக்கு போகாதீங்க அங்க ஒரிஜினல் சரக்கு இல்லை - கோவில்பட்டி பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் : தூத்துக்குடி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி. கோவில்பட்டியில் கடலை மிட்டாய் பிரசித்தி பெற்ற தொழில் புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்தோம், தீப்பெட்டி தொழில் நிறைந்துள்ளது, விவசாயம், தீப்பெட்டி, கடலை மிட்டாய் ஆகியவை நிறைந்த பகுதி. பனை மரத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர், பதனீர் மூலம் பல பொருட்கள் தயாரிக்கலாம். உப்பளத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இப்படி பல தொழில்கள் நிறைந்த மாவட்டம்.
அதிமுக ஆட்சியில் தான் விமான போக்குவரத்துக்கு 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்திக் கொடுத்தோம். தென்காசி, நெல்லை, குமரி மக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் விரிவாக்கத்துக்கும் அதிமுக அரசு தான் காரணம். விமான நிலையம், துறைமுகம் இரண்டும் அமைந்த ஒரே மாவட்டம். உப்பளத் தொழிலாளர்கள் மழைக் காலத்தில் நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் 5 வேட்பாளர்கள்... அறிமுகம் செய்து வாக்குச் சேகரிக்கும் EPS.. . கலகலக்கும் நெல்லை..!
அதிமுக ஆட்சியில். பனை தொழிலில் ஈடுபட்டவர்கள் மதிப்புக் கூட்டு உற்பத்தி பொருட்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும், நிரந்தர வருமானம் கிடைக்கும் ஒரு சில மாதம்தான் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு வருமானம் மற்ற மாதங்களில் வருமானம் இல்லை, எப்படி உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படுகிறதோ அதேபோல பனை ஏறும் தொழிலாளிக்கும் நிதியுதவி வழங்கப்படும். பனை மரத்தில் ஏறும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும், உபகரணங்கள் விலையின்றி வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம், கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கினோம். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 52% ஆக இருந்தது, அது இப்போது 48% ஆகிவிட்டது. 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்து, இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்று 2030ம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது தமிழ்நாடு.
அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது
அதிமுக அரசு. கொரோனா காலம் ஓராண்டு மக்கள் வெளியில் வரமுடியலை விலைவாசி உயரவில்லை. கண்ணை இமை காப்பது போல மக்களை பாதுகாத்தோம். 32 மாவட்டங்களுக்கு நான் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தேன். அதனால் இந்தியாவிலே கொரோனா தடுப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது. ஒரு வருஷம் ரேஷனில் விலையில்லா பொருட்களை கொடுத்தோம். அர்சுக்கு ஒரு ரூபாய் வருமானம் இல்லாமல் கொரோனாவை தடுக்க 40 ஆயிரம் கோடி செலவழித்தோம்.
கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது, சிறப்பாகத் தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். எப்படி தேர்வெழுதி, எப்படி அடுத்த வகுப்புக்குச் செல்லப்போகிறோம் என்று அச்சத்தில் இருந்த மாணவர்களுக்கு விடிவுகாலம் அமைந்தது. இது அதிமுகவின் சாதனை. அம்மா உணவகம் மூலம் ஏழைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு மூன்று வேளையும் என 7 லட்சம் பேருக்கு உணவு கொடுத்தோம். இப்படி எந்த அரசும் செயல்பட்டதில்லை. வறட்சியிலும் தனி கவனம் செலுத்தி மக்களுக்கு நீர் கொடுத்தோம். டெல்டாவில் புயலையும் சரி செய்தோம், கொரோனாவையும் சரி செய்தோம். சோதனை காலத்திலும் சிறப்பாக செயல்பட்டோம்.
திமுக ஆட்சியில் என்ன பிரச்னை வந்தது? ஆனால், ஊழல் மட்டும் நடக்கிறது. கலெக்ஷன் கரப்ஷன் கமிஷன் தான் நடக்கிறது. ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி வருமானம் அதிகம் வந்தும் 5 லட்சம் கோடி கடன் வாங்கியும் புதிய திட்டம் இல்லை இந்த ஆட்சி தொடர வேண்டுமா? இந்த கடனை மக்கள் தான் கட்ட வேண்டும். ஸ்டாலின் கடன் வாங்கி வச்சிட்டு போய்ட்டாரு. நீங்கள் ஓட்டு போட்டு தேர்வுசெய்த அரசு பற்றி சிந்தியுங்கள்.
73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடிதான். ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள். இப்படி கொள்ளையடிக்கும் ஆட்சி தொடர வேண்டுமா?
அரசு காலிப்பணியிடங்கள் ஐந்தரை லட்சம் நிரப்புவோம் என்றார். ஆனால் 94 ஆயிரம் பேரைத்தான் நிரப்பியுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்கள் ஒரு லட்சம் பேர். அதில் 6 ஆயிரம், ஏற்கனவே ஐந்தரை லட்சம் மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்புவோம் என்கிறார்,
அதிமுக ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி
மூலம் அதிக வேலைவாய்ப்பு கொடுத்தோம் திமுக அரசால் அந்த தேர்வைக் கூட ஒழுங்காக நடத்தமுடியவில்லை. விலைவாசி உயர்வை தடுக்க எதுவும் செய்யவில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், விலைவாசி உயரும் சமயங்களில் அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.
கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.எப்படி வீடு கட்டமுடியும்? கனவில் வேண்டுமானால் கட்டலாம். கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை. பொம்மை முதல்வருக்கு ஒன்றும் தெரியவில்லை.
5 ஆயிரம் கோயிலில் குடமுழுக்கு செய்வதாக ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இன்று பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மேற்கூரை இடிந்து ஒரு பெண் பலியாகி இருக்கிறார். இப்போதுதான் முதல்வர் மு. க.ஸ்டாலின் திறந்துவைத்தார், உயிர் போய்விட்டது. இருவர் காயம். இந்த லட்சணத்தில் 5 ஆயிரம் குடமுழுக்கு நடக்குமாம், ஏற்கனவே உயிர்பலி ஆகிவிட்டது இதுதான் திமுக ஆட்சியின் நிலைமை.
சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் படுகொலை. காணாமல் போனவுடன் புகார் செய்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை, பெற்றோரே தேடும்போது குழந்தை இறந்து கண்டுபிடிக்கப்பட்டது, போலீஸ் மோசமாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் முழுமையாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் கொள்ளை எல்லோருக்கும் தெரியும். 10 ரூபாய் பாலாஜி. நம்மாட்கள் யாரும் டாஸ்மாக் போகாதீர்கள் அங்கு ஒரிஜினல் சரக்கு இல்லை என்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்அமலாக்கத்துறை கண்டுபிடித்து விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது.
தீப்பெட்டி தொழிற்சாலை 18% ஜிஎஸ்டியை 12% ஆக குறைக்க கோரிக்கை வைத்தோம், மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி 5% ஆக குறைப்போம். மின்கட்டணம் 67% உயர்வு, உள்ளாட்சியில் வீட்டுவரி 100%, கடைவரி 150% உயர்வு, குப்பைக்கும் வரி போட்டது. இந்த வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும். மக்களின் துன்பத்தை களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கபப்டும்.
அதிமுக ஆட்சியில் 297 அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். ஸ்டாலின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுப்பாராம். அது ஊழல் செய்வதற்குத்தான். அதிமுக மக்கள் எண்ணப்படி செயல்படும் அரசு. முக்கியமான தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். அதிமுக கூட்டணியில் அனைவரும் வெற்றி பெற வாக்களியுங்கள் என்றார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!