அனல் பறக்கும் அரசியல் களம்..!! சசிகலா 'அம்மா அதிமுக' கட்சி அறிவிப்பு..!! 2026 தேர்தலில் எடப்பாடிக்கு பெரும் சவால்..!!
கமுதி அருகே நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அம்மா அதிமுக என்ற புதிய கட்சியின் அறிவிப்பை சசிகலா வெளியிடுவார் என்கின்றனர்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமடைந்து வரும் நிலையில், வி.கே. சசிகலா புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்க உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் இருந்த சசிகலா, நாளை (பிப்ரவரி 24) ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'அம்மா அதிமுக' என்ற புதிய கட்சியை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடைபெறும் பிரம்மாண்டமான நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஆதரவாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். கட்சி பெயர் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் நடைமுறைகளைத் தொடங்குவதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. அங்கீகாரம் கிடைக்கும் வரை காத்திருக்காமல், மதுரையில் பிரமாண்ட தொடக்க விழா நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!
தேர்தல் தேதி மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஏப்ரலில் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டு கூட்டணி பேச்சுகள் நடைபெறுகின்றன. மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீடு சிக்கலாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வமும் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன. பாமக, தமாகா உள்ளிட்டவை இணைந்தாலும், தேமுதிக திமுக பக்கம் சென்றது எடப்பாடி பழனிசாமியின் திட்டங்களை பாதித்துள்ளது.
மேலும், நீண்டகால மோதலுக்குப் பிறகு டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்தது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் முதல்வரான எடப்பாடியும், தன்னால் அரசியலில் திரும்பிய தினகரனும் ஒன்றுசேர்ந்து தன்னை ஓரம்கட்டியதாக அவர் கருதுவதாகத் தெரிகிறது. இதனால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய செல்வாக்கைப் பயன்படுத்தி எடப்பாடி-தினகரன் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ள அவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில், குறிப்பாக தஞ்சை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் தனது ஆதரவாளர்களை களமிறக்கி அதிமுகவை பலவீனப்படுத்துவதே சசிகலாவின் முதன்மை நோக்கமாகத் தெரிகிறது.
விஜய் கட்சி வெற்றி பெறாவிட்டாலும், அதிமுகவை வெல்ல விடாமல் தடுப்பதே இலக்கு என சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பாஜக தரப்பு சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், புதிய கட்சி தொடங்கும் முடிவில் சசிகலா உறுதியாக உள்ளார். இந்த நகர்வு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: புதிய கட்சி? துரோகிகளை வேரறுக்கணும்... சசிகலா அழைப்பு..!!