கொடுமையின் உச்சம்!! வெட்கக்கேடு!! சாபக்கேடு! விஷப்பூச்சி, பாம்பு கடியால் இறந்த மாணவர்கள்! இபிஎஸ் கொந்தளிப்பு!
பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர் முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு!
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் நடந்த மாணவர் உயிரிழப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டி, அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் உயிர் பறிபோவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசுப் பள்ளி வளாகத்தில் விஷப்பாம்பு கடித்ததால் ஒரு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசுப் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ஆம் வகுப்பு மாணவி பலியானார். இந்த சம்பவங்கள் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இழந்த குடும்பங்களுக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரம் கூட இல்லாத நிலைமை காரணமாக இத்தகைய கொடூர சம்பவங்கள் நடப்பதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கூரை இடிந்து விழுந்துவிடுமோ, சுவர் சரிந்து விழுந்துவிடுமோ, தரமற்ற உணவால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் மீது தொடரும் தாக்குதல்!! வெறுப்பின் வெளிப்பாடு இது!! அண்ணாமலை கண்டனம்!
கள்ளக்குறிச்சி அருகே ரிஷிவந்தியம் கீழத்தேனூர் அரசுப் பள்ளியில் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்த சம்பவம் மேலும் கொடுமையானது என்று இபிஎஸ் சாடியுள்ளார். பள்ளிக்கு ஆட்களை நியமிக்கக்கூட வக்கில்லாத நிலையில் மாணவர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை திமுக அரசு உணருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று ஆடம்பரமாக விளம்பரம் செய்யும் திமுக அரசு, பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது போன்ற போட்டோஷூட் மட்டுமே செய்யும் ஒருவர் முதல்வராக இருப்பது சாபக்கேடு என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். குரூப் 2 போன்ற முக்கிய தேர்வுகளை கூட சரியாக நடத்தத் தெரியாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பு இதற்கு என்ன பதில் அளிக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: பொறுமைக்கும் எல்லை உண்டு! அரசுக்கு அண்ணாமலை வார்னிங்! சம வேலைக்கு சம ஊதியம் வாக்குறுதி என்னாச்சு?