×
 

23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

''23ம் புலிகேசி படம் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆட்சியை நடத்தினார்கள்,'' என்று பெரம்பலுார் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இபிஎஸ், “ஸ்டாலின் எப்போதும் மோடி, பாஜக பற்றி மட்டுமே பேசுகிறார். என்னை பாஜக அடிமை என்று சொல்கிறார். அவரிடம் வேறு பேச்சு இல்லை. உங்களுக்கு தில்லு இருந்தால் அதிமுக பற்றி பேசுங்கள். பதில் சொல்லத் தயார். அதை விடுத்து மக்களை குழப்பினால் 100% தோல்விதான்” என்றார்.

மேலும், “கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை ‘கூடா நட்பு’ என்று சொன்னார். அந்த காங்கிரசுடன் தான் இப்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பிறகு ஏன் கூட்டணி வைத்தீர்கள்? அவதூறாக பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாவடக்கம் தேவை” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் களமிறங்கும் EPS..! ஏப்.8ல் சூறாவளி பிரச்சாரம்..!!

ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்ட வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய இபிஎஸ், “இந்தத் தேர்தல் திமுகவுக்கு இறுதித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி குடும்ப ஆட்சி கிடையாது. தமிழக மண்ணில் பிறந்த ஒருவர்தான் தமிழகத்தை ஆள முடியும்” என்றார்.

23வது புலிகேசி படத்தை சுட்டிக்காட்டிய அவர், “அப்படித்தான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆட்சியை நடத்தினார்கள். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் மெகா ஊழல் 2ஜி. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ராசா, கனிமொழி இருவரும் திகார் சிறைக்குச் சென்றனர். நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை. இன்னும் வழக்கு முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கப்படலாம்” என்று கூறினார்.

போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய இபிஎஸ், “திமுக ஆட்சியின் ஒரே ஆண்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்தது. அதிமுக ஆட்சி அமைந்து மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்” என்றார்.

தமிழகத்தின் கடன் நிலை குறித்தும் பேசிய அவர், “இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். திமுகவின் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். ஒவ்வொருவர் தலையிலும் பல லட்சம் கடன் சுமை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கிவிட்டார். மக்களின் வரிப்பணம் எங்கே போனது? அதிக வருவாய் வந்தும் கடன் வாங்குகிறார்கள். பெரிய திட்டம் இல்லை” என்று விமர்சித்தார். இந்தப் பிரசாரம் தேர்தல் களத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்... அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்..! இபிஎஸ் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share