"பொடியாக்க நீங்க ரெடியா?..." - அமைச்சர் சரத்குமாருக்கு சவால் விட்ட சேகர் பாபு... கையில் என்ன வச்சிருக்காரு பாத்தீங்களா?
கவனத்தை ஈர்ப்பதற்கான ஆர்ப்பாட்டம் இது; இது ஒரு டிரெய்லர்தான்.
பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்திய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, கையில் வைத்திருந்த பதாகை சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. அமைச்சரே மாத்திரை தயார்! போன் அண்ட் ஏடிம் கார்டு தயார் ‘பொடி’யாக்க நீங்கள் தயாரா? என்ற கேள்வியுடன் மாத்திரை, செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றின் கேலி சித்திரம் உள்ள பதாகையை சேகர் பாபு கையில் பிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் பாபு கூறியதாவது: தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், "கில்லி சரத்" என்ற பெயரில் அறியப்படும் அமைச்சர், கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின்போது போதைப்பொருளை பொடியாக்கி பயன்படுத்துவது போன்ற காட்சிகள் வெளியானதாக கூறப்படுகிறது. அந்தக் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு தனியார் ஊடகங்களும் வெளியிட்டன.
இதையும் படிங்க: “மக்கள் தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்...”- விசிலுக்கு ஓட்டு போட்டவர்களை பார்த்து தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு...!
இதுகுறித்து அரசின் கவனத்தை ஈர்க்கவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாவட்டத்தில் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு காவல்துறையிடம் முறையாக நேற்று முன்தினமே அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.
முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தோம். ஆனால், அங்கு ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்ததால், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியது. அதற்கு நாங்களும் ஒப்புதல் அளித்தோம்.
இன்று காலை மேடை அமைக்கும் பணிகள் தொடங்கியபோது, 25-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு வந்தனர். குறிப்பாக எழும்பூர் காவல் துணை ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அந்தப் பகுதியின் உதவி ஆணையர் ஜெகதீஷ் ஆகியோர், நான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வழக்கறிஞரும் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், கழுத்தில் கை வைத்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
மேலும், மேடை அமைப்பதற்கும் ஒலிப்பெருக்கி வசதிகளை ஏற்படுத்துவதற்கும் கொண்டு வரப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேடை அமைக்கும் தொழிலாளர்களையும் கைது செய்தனர்.
இது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டமா? நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தவும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம்தான் இது.
இது ஒரு டிரெய்லர்தான். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, ஒரே இடத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்று, இன்று சென்னையில் மூன்று இடங்களில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் எங்கள் இயக்கத்திற்கு மேலும் உற்சாகத்தையே அளிக்கும்.
"அடிக்க அடிக்க எழும் பந்துபோல், அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம்போல்,
தீட்டத் தீட்ட ஜொலிக்கும் வைரம்போல்," எங்கள் இயக்கம் மேலும் வலிமையடையும்.
திராவிட மாடல் ஆட்சியின் நாயகன், 24 வயதிலேயே நெருக்கடிகளை புன்னகையுடன் எதிர்கொண்டவர். அவருடைய வழியில் செயல்படும் நாங்களும், சிறைச்சாலை எதுவாக இருந்தாலும், காவல்துறையின் தடியடி எதுவாக இருந்தாலும், புன்னகையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்.
தமிழக அரசு எங்களை எவ்வாறு அணுகுகிறதோ, அதேபோல் அந்த அணுகுமுறைக்கு ஏற்ப எங்களின் ஜனநாயகப் போராட்டமும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் போராட்டம் தொடரும்... தொடரும்... தொடரும்... என்றார்.
இதையும் படிங்க: வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாலும் 100% தோல்வி உறுதி!! விரக்தியில் வெடிக்கிறார், துடிக்கிறார் மு.க.ஸ்டாலின்! தவெக பதிலடி!