ஒரு கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு: திமுக அரசின் நிதியுதவி திட்டத்தில் பாரபட்சம் என பாமக புகார்!
தேர்தல் தோல்வி பயத்தால் அவசர அவசரமாக வங்கி கணக்கில் ரூபாய் 5000-த்தை திமுக அரசு செலுத்துகிறது; மக்களின் வரிப்பணத்தை ஏற்றிவிட்டு இப்போது கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல் என பாமக வழக்கறிஞர் பாலு சாடியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக சமூக நீதிப் பேரவை தலைவரும் வழக்கறிஞருமான பாலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிதியுதவித் திட்டம் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்.
மக்களுடைய வங்கி கணக்கில் திடீரென ரூபாய் 5000 செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க வரும் தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் வந்துவிட்டதால் திமுக நடத்தும் பல நாடகங்களில் இதுவும் ஒன்று. ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்; இந்த நாடகத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால், தற்போது வெறும் 1 கோடியே 30 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படவில்லை. இது மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி. திமுக-வின் இந்த பகல் கனவு ஒருபோதும் பலிக்காது."
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்
ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் முன்னோட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பைப் பெற்றதைக் கண்டு மிரண்டு போன திமுக, அவசர அவசரமாக ரூ.5000 என அறிவித்துள்ளது. மேலும், அதிமுக நடத்தவிருந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கவே இந்தத் திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் மின்சாரக் கட்டணம் என அனைத்தையும் பல மடங்கு ஏற்றிவிட்டார்கள். ஒரு பக்கம் மக்களின் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, மறுபக்கம் தேர்தலுக்காகச் சொற்பத் தொகையைத் தருவது எதையும் ஈடு செய்யாது. மக்கள் படும் துயரத்திற்கு இந்த ரூ.5000 மருந்தாகாது" என வழக்கறிஞர் பாலு காட்டம் தெரிவித்தார்.
திமுக அரசு எத்தனை கவர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், நடைபெறவுள்ளத் தேர்தலில் மக்கள் அந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குமரி கடலில் பிரேமலதா! விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த தேமுதிக தலைவர்!