×
 

சபரீசனுடன் தொடர்பா?... என் கம்பெனியோட பாதி பங்கையே எழுதித் தரேன்... ஓபனாக சவால் விட்ட ஜி ஸ்கொயர் நிறுவனர்...!

ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயத்தின் இந்த சவால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைச் சுற்றி ஏற்கனவே நிலவி வரும் அரசியல் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

“ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்தால், நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இலவசமாகவே எழுதித் தருகிறேன்” என ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம் விடுத்துள்ள சவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முந்தைய ஆட்சிக் காலத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்ற நிலையில், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்திற்காக சுமார் 50 சதவீத நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியது.

இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

திட்டம் கைவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என விமர்சனம் செய்தது. இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகத்தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் கதறுகிறார்கள்” என விமர்சித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பரந்தூர் பகுதியில் ஜி ஸ்கொயர் நிறுவனம் அதிக அளவில் நிலங்களை வாங்கி வைத்திருப்பதாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பினர்.

ஆனால், பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த பகுதியில் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தினருக்கோ எந்த நிலமும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. அந்த அறிக்கை தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம், தமது நிறுவனத்திற்கும் சபரீசனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் ஆதாரமின்றி தங்கள் நிறுவனத்தைப் பற்றி பேசியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பாலா ராமஜெயம், நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: “சட்டப்பேரவையில் ஆதாரம் இல்லாமல் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேசியவர்களிடம் ஆதாரம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆதாரங்களை வழங்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பின்னர், 25 நாட்களுக்குள் கட்டுமானம் மற்றும் இதர அனுமதிகள் வழங்கப்படுவதை நான் வரவேற்கிறேன். இதுவரை ரியல் எஸ்டேட் துறையில் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாமல், வங்கி பரிவர்த்தனை அடிப்படையில் தொழில் செய்யும் ஒரே நிறுவனம் ஜி ஸ்கொயர். எங்கள் நிறுவனத்தை முன்னாள் ஆட்சியாளர்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவது ஏற்புடையதல்ல.

பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த இடத்தைச் சுற்றி எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்த இடமும் கிடையாது. எப்போதெல்லாம் எனது நிறுவனத்தை சபரீசனுடன் இணைத்துப் பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு யாரோ ஒருவர் உறவு கொண்டாடுவதைப் போல இருக்கிறது.

நான் ஓபன் சவால் விடுக்கிறேன். எனது நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி. கடன் ரூ.2,300 கோடி. ஒவ்வொரு ஆண்டும் முறையாக கணக்கு தாக்கல் செய்திருக்கிறேன். என்னிடம் சோதனை நடத்தாத ஏஜென்சிகளே இல்லை.

நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டால், எனது நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இலவசமாகவே எழுதி கொடுத்துவிட்டு போகிறேன்” என்றார்.

 

இதையும் படிங்க: விடிந்ததுமே பேரிடி... உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு... காணாமல் போனவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share