×
 

அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும், அதுதான் எங்கள் அனைவரின் ஆசை என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.

தந்தைக்கு மகனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், எப்போது தீர்வு ஏற்படும் என பாமக தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு வழியே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ராமதாஸிடம் பகிரங்கமாக அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னை நெஞ்சில் குத்தி விட்டதாகவும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என்றும், முதுகில் குத்தி விட்டதாகவும் ராமதாஸ் மிகவும் மனம் வருந்தி பேசி இருந்தார். அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் அவரை கட்சியிலிருந்து நீக்க மாட்டேன் என்று ராமதாஸ் கூறினார். அன்புமணி பொறுமையாக இருந்தால் நானே முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன் என்று கூறிய ராமதாஸ், செயல் தலைவராக அன்புமணி பொறுப்பேற்றால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

ஆனாலும் அன்புமணி மீது பல்வேறு அதிருப்திகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார் ராமதாஸ். இதனிடையே நேற்று தந்தையர் தினம் என்பதால் அன்புமணி தந்தையர் எல்லாம் தியாக தீபங்கள் என்று கூறினார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் தந்தையர் தினத்திற்கு அன்புமணி போட்ட பதிவு அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்தது.

இதையும் படிங்க: உறுதியானதா பாமக - பாஜக கூட்டணி? ராமதாஸிடம் பேசியது இதைத்தான்.. ஆடிட்டர் குருமூர்த்தி ரிப்ளை..

தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸ் புதிதாக தான் நியமித்த பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனமான ராமதாஸிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மருத்துவர் ஐயா என் மீது ஏதாவது கோபம் இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார். ராமதாஸ் ஆணையிட்டால் மகனாக அதனை செய்து முடிக்க தயார் என்று கூறிய அன்புமணி, ராமதாஸ் ஐயாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் ராமதாஸ் பாமகவின் மாநில தலைவர் அல்ல தேசிய தலைவர் என உருக்கமாக பேசிய அன்புமணி, மருத்துவர் ஐயா நீண்ட ஆயுளோடும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியோடு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் கூறினார். அன்புமணி தனது தந்தையிடம் மேடையிலேயே மன்னிப்பு கேட்டதால், இருவருக்குமிடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததா என பாமக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில், பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க வருகை தந்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல; இரு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து மனம்விட்டு பேச வேண்டும். இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசை. பாமகவில் சுமூக தீர்வு ஏற்படுவது இருவரின் கையில்தான் உள்ளது. இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து சென்றால் நன்றாக இருக்கும் என்பதை தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அதற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறோம் என்று கூறினார். 

மேலும் இருவரும் பேசி தீர்வு கண்டால் கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினருக்கு உள்ள மன உளைச்சலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதை தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம் என்று ஜி.கே மணி தெரிவித்தார். 
 

இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share