நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் வைத்த கெடு! செப்.21க்குள் ஆஜராக உத்தரவு!
பணிச்சுமை காரணமாக அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரது தரப்பு வழக்கறிஞர், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
ராஞ்சி: நில மோசடி மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகாத நிலையில், வரும் செப்டம்பர் 21-ம் தேதி மாலை 4 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ராஞ்சியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஞ்சியின் பர்கெயின் பகுதியில் சுமார் 8.86 ஏக்கர் நிலத்தின் உரிமை மற்றும் பரிமாற்றத்தில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனிடமும் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 31-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை முறைப்படி பதிவு செய்வதற்காக ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணிச்சுமை காரணமாக அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரது தரப்பு வழக்கறிஞர், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: ஏர்போர்ட் நிர்வாக மாற்றம் எதற்கு.? பதில் சொல்லுங்க CM..! வானதி சீனிவாசன் கேள்வி.!!
வழக்கறிஞரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அவகாசம் வழங்கியதுடன், செப்டம்பர் 21-ம் தேதி மாலை 4 மணிக்குள் ஹேமந்த் சோரன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கையில் அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம் அல்லது காணொலி வாயிலாக பங்கேற்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை கோரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த நீதிமன்ற நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கில் தமக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என ஹேமந்த் சோரன் தரப்பு முன்வைத்துள்ளதாகவும், வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை குறித்து அவரது தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நில மோசடி மற்றும் பணமோசடி தொடர்பான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவையாகும்.
செப்டம்பர் 21-ம் தேதி ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலையில், அடுத்தகட்டமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நடவடிக்கை எவ்வாறு நகரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2027-ல் புதிய அரசியல் கட்சியா? அண்ணாமலையின் அடுத்த நகர்வு! நாடாளுமன்ற தேர்தலுக்கு டார்கெட்!!