ஒகேனக்கல்லில் 8,000 கனஅடியாக அதிகரித்த காவிரி நீர்வரத்து! பரிசல் இயக்கத்துக்கு தடை!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், அங்கு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டுநர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீரோட்டம் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசல் இயக்கத்தை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று 4,385 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 6,179 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ளது. அணையில் மொத்த நீர் இருப்பு 43.27 மில்லியன் கனஅடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் தேவைக்காக தற்போது 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பும், ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீரின் வேகம் அதிகரித்திருப்பதும் ஆற்றங்கரையோர பகுதிகளில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணையிலும் நீர்வரத்து
இதனிடையே, தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கும் 920.30 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு தற்போது 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக உள்ள நிலையில், அணையில் 3,212.10 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீர்வரத்து மற்றும் நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை எப்போது நீக்கப்படும் என்பது அடுத்தகட்ட நீர்வரத்தை பொறுத்தே முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை