வெள்ளத்தில் சிக்கிய நேபாளத்திற்கு இந்தியா உதவிக்கரம்! 37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது 2-வது விமானம்!
நேபாளத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகளில் சவால்கள் நீடிக்கின்றன. பல பகுதிகளுடனான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு உதவும் வகையில் இந்தியா தனது நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 37.5 டன் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் இரண்டாவது விமானம் வியாழக்கிழமை காலை நேபாளம் புறப்பட்டுச் சென்றது.
நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியது. ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 157 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைலாஷ் யாத்திரைக்காக இந்தியாவில் இருந்து நேபாளம் சென்றவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் காணாமல் போன இந்தியர்களை மீட்பது மற்றும் அவர்களின் நிலையை கண்டறிவது தொடர்பாக கவனம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: போர் விமானங்களுக்கு இனி வெளிநாட்டை நம்ப வேண்டாம்? இந்தியா எடுத்த அதிரடி முடிவு!
இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா உடனடியாக நிவாரணப் பொருட்களை அனுப்பத் தொடங்கியது. இதன் முதல் கட்டமாக, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 10 டன் நிவாரணப் பொருட்கள் புதன்கிழமை மாலை இந்திய விமானப் படை விமானம் மூலம் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது விமானம் மூலம் மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் மருத்துவப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிவாரண நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழலில் அந்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நேபாளத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகளில் சவால்கள் நீடிக்கின்றன. பல பகுதிகளுடனான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேபாள பேரிடர் சூழலில் இந்தியாவின் நிவாரண உதவி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாயமான இந்தியர்களின் நிலை குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கிய இந்திய விமானப்படை அதிகாரி? பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கசியவிட்டதாக கைது