பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், இன்று (மார்ச் 31) காலை பாஜகவில் இணைந்தார்.
கொல்கத்தா: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரும், அட்லாண்டா ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வென்றவருமான லியாண்டர் பயஸ், இன்று (மார்ச் 31) காலை பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக அவரது இந்த அரசியல் நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜு மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் எம்.பி.யுமான மஜூம்தார் ஆகியோரின் முன்னிலையில் கொல்கத்தாவில் லியாண்டர் பயஸ் பாஜக கொடியை ஏந்தினார். சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்-ஐ சந்தித்துப் பேசிய அவர், அதன் பிறகு பாஜகவில் இணையும் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
லியாண்டர் பயஸ் 2021 அக்டோபரில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்திருந்தார். ஆனால் 2022 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துள்ள அவரது முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அராஜகத்தால் பாதிக்கப்படும் மே.வங்கம்! அமித்ஷா குற்றச்சாட்டு!! மம்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு!
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்றும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29 அன்றும் நடைபெறுகிறது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தலில், லியாண்டர் பயஸின் இணைப்பு பாஜகவுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸின் மிகப் பிரபலமான முகங்களில் ஒருவர். அவரது அரசியல் பிரவேசம் மேற்கு வங்க மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
பாஜகவில் இணைந்த பிறகு லியாண்டர் பயஸ், “நாட்டின் வளர்ச்சிக்காகவும், மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாஜகவுடன் இணைந்துள்ளேன்” என்று தெரிவித்தார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், லியாண்டர் பயஸின் இந்த நகர்வு அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தகுதி உள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிராமிஸ்!!