கோவை டூ கரூர்.. விளைநிலங்களில் உள்ள எண்ணெய் குழாய்களை அகற்றுக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!
கோவை முதல் கரூர் வரை விளைநிலங்களில் அமைக்கப்பட்ட எண்ணெய் குழாய்களை அகற்ற வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விவசாய நிலங்கள் வழியாக மேற்கொள்ளவுள்ள இருகூர் - தேவன்கொந்தி எண்ணெய் குழாய் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய அரசின் கெயில் இந்தியா நிறுவனம் 2013-ம் ஆண்டு விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைப் புதைக்க முயற்சி மேற்கொண்டபோது, அதனை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அதனைத் தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
இதையும் படிங்க: ஆர்பிஐ வெளியிட்ட நகைக்கடனுக்கான ரூல்ஸ்.. முழுமையாக ரத்து செய்க.. ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!
இந்த திட்டம் குறித்து 25-03-2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய ஜெயலலிதா, விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களைப் பதிக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டுமென்றும், நெடுஞ்சாலைகள் ஓரமாக குழாய்களை பதிப்பதற்கு கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் எடுத்துக் கூறினார். இதன் விளைவு இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இருகூர் - தேவன்கொந்தி எண்ணெய் குழாய் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், இன்னும் மூன்றாண்டுகளுக்குள் மற்றுமொரு எண்ணெய் குழாய் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே 1999-ம் ஆண்டு கோவை முதல் கரூர் வரை விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பொருத்தப்பட்டதன் விளைவாக அங்கு நிலத்தின் மதிப்பு சரிந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் என்பது வேளாண் தொழிலையும், விவசாயிகளையும் பாதிக்கும் செயலாகும்.
தற்போது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ள கோவை இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையிலான எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலை ஓரமாக அமைக்க வலியுறுத்தியும், ஏற்கெனவே கோவை முதல் கரூர் வரை விளைநிலங்கள் வாடே பொருத்தப்பட்ட எண்ணெய் குழாய்களை அங்கிருந்து அகற்றி அவற்றையும் நெடுஞ்சாலை ஓரமாக பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அங்குள்ள விவசாயப் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி அங்குள்ள கிராமங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 10-06-2025 அன்று அவிநாசிபாளையம், கோவை ரோடில் போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், மேற்படி திட்டம் குறித்து தி.மு.க. அரசு மவுனம் சாதிப்பது, தி.மு.க. இந்த திட்டத்தை மறைமுகமாக ஆதரிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜெயலலிதா கெயில் திட்டத்திற்கு எதிராக எப்படி குரல் கொடுத்தாரோ அதேபோல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்படி திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்-அமைச்சருக்கு உண்டு.
விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதிக்கக்கூடிய இருகூர் - தேவன்கொந்தி எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தினை சாலை ஓரமாக அமைக்கவும், ஏற்கெனவே கோவை முதல் கரூர் வரை அமைக்கப்பட்ட எண்ணெய் குழாய்களை அங்கிருந்து அகற்றி அவற்றையும் சாலை ஓரமாக பொருத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கள் அறப்போராட்டம்! மிரட்டல் உருட்டல் எங்க கிட்ட வேண்டாம்... எச்சரிக்கும் சீமான்!