தவெகவில் நவீன தீண்டாமையை நுழைக்கிறாரா விஜய்?... ஜெயலலிதா பாணியில் அதிரடி சம்பவம்...!
ஜெயலலிதா இறந்தாலும் அவருடைய கோட்பாடுகள் சாகா வரம் பெற்றவை என்பதை தவெக தலைவர் விஜய் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.
ஜெயலலிதா அதிமுகவை ராணுவ கட்டுப்பாடு வழிநடத்தினார் என இன்றளவும் அரசியல் விமர்சகர்கள் சொல்வது உண்டு. ஜெயலலிதா காலத்தில் தங்கள் இல்ல நிகழ்வுகளுக்கு திமுகவினரையும் அதிமுகவிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர்களையும் அழைக்க மாட்டார்கள். அப்படி அழைத்தால் அது ஜெயலலிதாவின் கோப பார்வைக்கு ஆளாக நேரிடும். இப்போது இந்த கலாச்சாரம் தவெகவில் பரவ தொடங்விட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது, தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசனின் கடிதம்.
தவெகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசனின் இல்ல விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டதும். அவருக்கு வரவேற்பு அளித்ததும் சர்ச்சை ஆகியிருக்கிறது. தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், தன்னுடைய தன்னிலை விளக்கத்தை விஜய்க்கு அனுப்பியிருக்கிறார். அதில், ’’எனது புதிய இல்ல புதுமனை விழாவுக்கு அனைவரையும் அழைத்தேன். அதில் மாற்றுக் கட்சி அமைச்சரையும் அழைத்தேன். குடும்ப நண்பர் என்பதால், அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன். இச்செயலுக்காக நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில், என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களைத் தவிர வேறு எந்த ஒரு மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்’’ எனச் சொல்லியிருக்கிறார்.
இதேபாணியை தான் அதிமுகவில் எழுதி வைக்கப்படாத சட்டமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைபிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு பிடிக்காத விஷயத்தை செய்வது யாராக இருந்தாலும் தயவு தட்சண்யம் பார்க்காமல் தூக்கி வீசிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அனைத்தையும் காலி செய்துவிடுவார். யாரும் எதிர்த்து பேசவோ ஏன் மன்னிப்பு கேட்டு மன்றாடவோக்கூட முடியாது. அதனால் தான் ஜெயலலிதாவை அரசியல் ஜாம்பவான்கள் கூட இரும்பு பெண்மணி என்றே அழைத்தனர்.
இதையும் படிங்க: தேமுதிகவுக்கு 2026-ல் ராஜ்யசபா சீட்... அடித்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!!
தனக்கு நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவரைக் கூட ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து ஒதுக்கிவைத்தார். அவர் குணம் தெரிந்ததால் தான் வி.கே.சசிகலா கணவர் பக்கம் அல்ல, ஜெயலலிதா பக்கம் நின்றார். இதனால் கடுப்பான நடராஜன் தனது 70வது பிறந்தநாள் விழாவின் போது,‘சிலர் யாரையும் முழுவதுமாக நம்புவதில்லை. ஏன்...அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. நான் யாரை எதற்காகச் சொல்கிறேன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எழுதப்படாத சட்டத்தைப் போடுகிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், நவீனத் தீண்டாமை, கட்சிகளின் பெயரால் நடக்கிறது’’ என்றெல்லாம் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார்.
தற்போது அதே நவீன தீண்டாமையைத் தான் விஜய்யும் கையில் எடுத்திருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கடுமையாக சாடுகின்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர், திருமணம், புதுமனை புகு விழா போன்ற நிகழ்ச்சிகளில் திமுக, அதிமுக, பாமக, பாஜக என பல கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஒன்றாக சந்திப்பதும், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்வதும் வழக்கமாகி வருகிறது. முதலமைச்சர் தலைமையில் நடக்கும் அரசு விழாக்களில் கூட ஆளும் கட்சியான திமுக எம்.எல்.ஏ.க்களுடன், எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் நாகரீகம் ஏதுவும் இல்லாமல். நேற்று கட்சி ஆரம்பித்த விஜய், இப்படி தமிழக வெற்றிக் கழகத்தினர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மட்டுமே பழக வேண்டும், அவர்களை மட்டுமே உங்கள் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க வேண்டும், மற்ற கட்சியினரை எந்த விசேஷத்திற்கும் அழைக்கக்கூடாது என்பது போல் மாவட்ட செயலாளரின் மன்னிப்பு கடிதம் மூலம் மறைமுக எச்சரிக்கை விடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: தவெகவுடன் கூட்டணியா? - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி...!