×
 

மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

ஆளுநர் மாளிகை அரசியல் கட்சியின் தலைமையகம்போல செயல்படக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியமைப்பை சுற்றிய அரசியல் பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆளுநர் மாளிகை தரப்பில், “தவெகவுக்கு 118 எம்எல்ஏக்கள் என்ற முழு பெரும்பான்மை இல்லை” என்று விஜயிடம் விளக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததன் மூலம் அந்த எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சியமைப்பில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆளுநரின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு ஆளுநர் குறுக்கே நிற்கிறார். வேறு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை அழைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்க வேண்டியது இயல்பான ஜனநாயக நடைமுறை” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு அழைப்பு விடுக்காதது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்

மேலும், “ஆளுநர் மாளிகை ஒரு அரசியல் கட்சியின் தலைமையகம்போல் செயல்படக்கூடாது. மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜோதிமணியின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், விஜய் ஏற்கனவே இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தவெக தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

அதே நேரத்தில், ஆளுநர் தரப்பு நிலையான அரசு அமைவது முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குதிரைப்பேரம் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை தவிர்க்கும் நோக்கில் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வரும் நிலையில், ஆளுநரின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share