உதயநிதி கைது விவகாரம்... 'சட்டமன்றத்தில் பங்கேற்க விடாமல் செய்த கோழைத்தனம்' - கனிமொழி கடும் கண்டனம்!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல் தடுக்கவே கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.
தஞ்சாவூரில் காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் பிரச்சினையை வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை கடும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி அவர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் (தவெக) புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு சட்டப்படி வழக்குத் தொடரலாம், நீதிமன்றம் அதில் தீர்ப்பு வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 4, 2026
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது…
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல், கைது உள்ளிட்ட அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று கனிமொழி விமர்சித்துள்ளார். மேலும், நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரை பங்கேற்க விடாமல் தடுக்கவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதற்காக கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்" என்றும் கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார். அரசியல் கருத்து வேறுபாடுகளை சட்டத்தின் வரம்பிற்குள் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கைது மற்றும் அடக்குமுறைகள் மூலம் தீர்வு காண முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி கைது விவகாரம் தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் எதிர்வினைகள் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: “தக்க பாடம் புகட்டப்படும்...” - விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த கனிமொழி...!