தமிழ்நாடு காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவர்: எம்பி விஜய் வசந்தை நியமித்தது காங்கிரஸ் மேலிடம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக வலைதளப் பிரிவு தலைவராக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை நியமித்து ஏஐசிசி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதளத் துறைத் தலைவராக (State Chairperson of Social Media Department) கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் கள மாற்றங்களும் சட்டமன்ற இடைத்தேர்தல்களும் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் கட்சியின் குரலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகப் பிரிவை முழுமையாகச் சீரமைக்க காங்கிரஸ் தேசியத் தலைமை திட்டமிட்டது. இதன் அடிப்படையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுடன் இப்புதிய நிர்வாகிகள் நியமனப் பட்டியல் முறைப்படி இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுடெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்திலிருந்து பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதளத் துறைத் தலைவராக கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற 6 ஒருங்கிணைப்பாளர்களும் (Coordinators) நியமிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!
அதன்படி சக்தி மாரிதாசன், ஜி.கே.முரளிதரன், சிவ சத்யராஜா குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜான் சாமுவேல் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகிய 6 பேர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை உறுப்பினராகவும், இளைஞர்களை ஈர்க்கும் ஆளுமையாகவும் விளங்கும் விஜய் வசந்த்திடம் தமிழ்நாடு காங்கிரஸின் டிஜிட்டல் பரப்புரைப் பிரிவு ஒப்படைக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் களப்பணியாளர்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!