"கரூர் பெருந்துயரம்"..! மீண்டும் விசாரணையை முடுக்கிய சிபிஐ..! களமிறங்கிய அதிகாரிகள்..!!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.
2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ந்த சோக சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளின் பற்றாக்குறை, அரசியல் பொறுப்பு உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியது.
சம்பவம் நடைபெற்ற உடனேயே உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இருப்பினும், இந்த விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்புகளிலிருந்து கேள்விகள் எழுந்தன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுயாதீனமான விசாரணையைக் கோரினர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் 2025 அக்டோபர் மாதம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. மேலும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இதன்மூலம் விசாரணை மிகவும் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!
சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணையைத் தொடங்கினர். வீடியோ ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான விசாரணை இடைப்பட்ட காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சமன் அனுப்பப்பட்டு தொடர்விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் பாஜக அலுவலகம் முன்பு முன்னாள் பெண் நிர்வாகி கதறல்... கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு... காரணம் என்ன?