×
 

என்னை பற்றி சட்டசபையில் பேசாதீங்க! மு.க.ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது? பின்னணியில் ஆதவ் அர்ஜூனா!

சட்டசபை கூட்டத்தொடரில் மார்ட்டினை மையமாக வைத்து தி.மு.க., - த.வெ.க., இடையே அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருகின்றன

“என்னைப் பற்றியும், எனது லாட்டரி தொழில் குறித்தும் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தி.மு.க.,வினர் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தரப்பில் தகவல் அனுப்பப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கோவையை சேர்ந்த மார்ட்டின், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் லாட்டரி தொழில் செய்து வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது மனைவி லீமாரோஸ் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலராகவும், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் மார்ட்டினை மையமாக வைத்து தி.மு.க., - த.வெ.க., இடையே அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்ட்டினின் லாட்டரி தொழில் தொடர்பான விவகாரங்களை தி.மு.க.,வினர் எழுப்பியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

இதையடுத்து, தனது தொழில் குறித்து சட்டசபையில் விவாதிப்பதை தவிர்க்குமாறு மார்ட்டின் தரப்பில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, “தயவு செய்து என்னைப் பற்றியும் எனது தொழில் பற்றியும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பேச அனுமதிக்க வேண்டாம்” என, நண்பர் ஒருவர் வாயிலாக ஸ்டாலினுக்கு மீண்டும் தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு, “அது உங்கள் மருமகன் கையில் தான் இருக்கிறது” என ஸ்டாலின் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த விவகாரம் குறித்து ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச மார்ட்டின் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மார்ட்டின் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் நேரடியாக ஸ்டாலினை சந்திப்பாரா, இந்த விவகாரம் சட்டசபை விவாதங்களில் தொடர்ந்து எதிரொலிக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மார்ட்டின் தரப்பிலோ அல்லது தி.மு.க., தரப்பிலோ இந்த தகவல் குறித்து இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share