×
 

12 வருட சர்ச்சைக்கு முடிவு!! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து!! மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீடு இப்போது முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக அரசு புதிய அரசாணை (GR) வெளியிட்டு, 2014-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது. இதனால் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கான இந்த ஒதுக்கீடு இனி செல்லாது.

2014-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, அப்போதைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அவசரச் சட்டம் (Ordinance) கொண்டு வந்தது. அதில் மராத்தா சமூகத்திற்கு 16% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு இது சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவு-A (SBC-A) அடிப்படையில் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நவம்பர் 2014-இல் தீர்ப்பளித்த நீதிமன்றம், மராத்தா ஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால் முஸ்லிம்களுக்கான 5% கல்வி இடஒதுக்கீட்டை மட்டும் அனுமதித்தது. அரசு வேலைவாய்ப்புகளில் இது செல்லாது என்று தெரிவித்தது.

இதையும் படிங்க: இந்து மத சடங்குகள் குறித்த கேலி பேச்சு!! பொன்முடி வரிசையில் செல்வகணபதி! திமுக எம்.பி பேச்சால் சர்ச்சை!!

இந்த 5% ஒதுக்கீடு அவசரச் சட்டமாகவே இருந்தது. அவசரச் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி நிரந்தர சட்டமாக மாற்ற 2014 டிசம்பர் 23-க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அது காலாவதியானது. 2014-க்குப் பிறகு பாஜக அரசு அதை நிரந்தர சட்டமாக்கவில்லை.

இருப்பினும் பழைய அரசாணைகள், சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்படாமல் இருந்ததால், சிலர் இன்னும் SBC-A சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வந்தனர். இந்த நிர்வாக குழப்பத்தை நீக்க, தற்போதைய அரசு புதிய GR வெளியிட்டு அனைத்து பழைய உத்தரவுகளையும் செல்லாதாக்கியுள்ளது. SBC-A சான்றிதழ் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.

பாஜக அரசின் நிலைப்பாடு: மத அடிப்படையில் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் இடமில்லை. எனவே இது நிர்வாக ரீதியான தெளிவுபடுத்தல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் OBC பிரிவில் (22 முஸ்லிம் சாதிகள்) அல்லது பிற தகுதிகளின் கீழ் இன்னும் பயன்பெறலாம்.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் இதை "பழிவாங்கும் செயல்" என்றும், "சிறுபான்மை விரோதம்" என்றும் விமர்சித்துள்ளது. AIMIM உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த முடிவு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது!

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் நடுரோட்டில் கிடந்த பெட்டிக்குள் வெடிகுண்டு!! பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு!! பாதுகாப்பு படையினர் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share