ஹல்த்வானி விவகாரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது கார்கே அதிருப்தி? பின்னணி என்ன?
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து கார்கே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தரகண்டின் ஹல்த்வானி நகரில் நடந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் மீது அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தன்னை சார்ந்த சமூகத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக கண்டனம் தெரிவிக்காதது அவரை வேதனைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஹல்த்வானி நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று உரையாற்றினார். இந்த கூட்டம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், அதே மைதானத்தில் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹோமம் நடத்தி, கோமியம் தெளித்து மைதானத்தை சுத்தப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கார்கே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!
இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தை எதிர்த்து உடனடியாக குரல் கொடுக்காதது கார்கேவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து கார்கே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஹல்த்வானியில் நடந்த சம்பவம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்காதது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, அடிக்கடி ஊடகங்களை சந்தித்து கட்சியின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக தெரிவிக்கும் இரண்டு மூத்த தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து பேசாதது கார்கேவுக்கு கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த இருவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அல்லது காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆகியோரில் ஒருவர் இருக்கலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.
இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், ஹல்த்வானி விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “கடைசி வரிசை” சர்ச்சை! சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த ராகுல் காந்தி, கார்கே!