×
 

அறிவாலயத்தில் தஞ்சமாகும் ஓபிஎஸ்... இபிஎஸ் தலையில் இறங்கியது இடி... லீக் ஆன மீட்டிங் சஸ்பென்ஸ்...!

திமுகவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் ஓபிஎஸின் திட்டம் தான் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அரசியலில் போகுமிடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என புகழ் மாலை சூட்டி இருக்கிறார். இதனால் திமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா என்ற விவாதம் எழும்பியுள்ளது. திமுகவை பரம எதிரையாக பார்க்கும் அதிமுகவில் இருந்து கொண்டு அடிக்கடி திமுகவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் ஓபிஎஸின் திட்டம் தான் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 

“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்திருக்கிறேன். மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திராவிட முன்னேற்ற கழகத்துக்கு இருக்கிறது” இதுதான் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேசிய வார்த்தைகள். செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்ன இந்த கருத்துகள் தான், அரசியலில் நிலையான இருப்பிடம் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஓபிஎஸ் அறிவாலயத்தில் கரை சேருகிறாரா? என்ற ஹாட் டாபிக்காக அரசியல் வட்டாரத்தில் உலா வர காரணம். அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு கொண்ட நபராக இருந்தார் ஓ. பன்னீர் செல்வம். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பலத்த அடிவாங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 

முதலமைச்சர் பதவியை இழந்து சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் செய்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இணைந்த பின்னரும் அமைதியாக இருக்காமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்தியதால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சில காலம் பாஜக ஆதரவில் பகுமானமாக வலம் வந்த ஓபிஎஸை பாஜகவும் கழற்றி விட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையும் படிங்க: அம்பலப்பட்ட தந்தை - மகன் கமிஷன் கூட்டணி...!! முகத்திரை கிழிக்கப்படும்... தோலுரித்த அதிமுக..!!

அதன் பிறகு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். இடையில் என்ன செய்வது என தெரியாமல் விஜய்க்கு கூட ஆதரவாக பேட்டி கொடுத்து தூண்டில் போட்டு பார்த்தார். ஆனால் எந்த மீனும் சிக்காத நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையோ அந்தோ பரிதாபமாகி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை நம்பியிருந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாக, ஓபிஎஸக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூட புதிதாக கட்சி தொடங்கி வேறு வேலையை பார்க்க தொடங்கிவிட்டார். 

இந்த சூழலில்தான் திடீரென சட்டப்பேரவை வளாகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் பேசியிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்கள் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்ற ஓ.பன்னீர்செல்வத்திடம், அப்படியானால் திமுகவில் இணைகிறீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு அவரும் வழக்கம் போல “பொறுத்திருந்து பாருங்கள்” என புன்னகையுடன் பதிலளித்துவிட்டு சென்றார். 

அதிமுகவில் இணைய மீண்டும் ஓ பன்னீர்செல்வம் விரும்பினாலும் அவரை ஏற்கும் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. பாஜக உதவியை எதிர்பார்த்து காத்திருந்த ஓபிஎஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். ஏற்கனவே சில முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து இருந்தாலும் தற்போதைய சந்திப்பின் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக பேசிக்கொள்ளப்படுகிறது. அரசியலில் எங்கு செல்வது?, யார் கையை பிடிப்பது? என தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் ஓபிஎஸ் அறிவாலயம் பக்கம் கரை சேர வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

அதிமுக தலைமை விஷயத்தில் பாஜகவை நம்பி ஏமாந்து போன ஓபிஎஸ் அதற்கு எதிராக திமுக அணியில் ஐக்கியமாக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் ஓபிஎஸ் ஐக்கியமாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் திமுகவின் உறுப்பினராக ஐக்கியமாக போகிறாரா அல்லது தேர்தல் கூட்டணியாக ஐக்கியமாக போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் மூலம் மதுரை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு என கருதப்படுகிறது. இதனால்தான் திமுகவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க தொடங்கி இருக்கிறாராம் ஓ பன்னீர் செல்வம் என்கிறார்கள் மூத்த அரசியல்வாதிகள். 

திமுக ஆட்சியை வீழ்த்தி அதிமுக ஆட்சிக்கு வரும் என பேச வேண்டிய இடத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என அகம் மகிழ்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது என்ற கிண்டல் பேச்சுக்களும் சோசியல் மீடியாவில் கிளம்பாமல் இல்லை.

இதையும் படிங்க: திமுக ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து..! பொன்னாடை போர்த்தியபோது கழுத்தில் குத்திய அதிர்ச்சி சம்பவம்...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share