×
 

சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... கோவையில் தீயாய் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா...!

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது விளையாட்டு மைதானங்களையும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் மற்றும் மதுப் பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. குறிப்பாக, போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்களிடையே பரவி வருவதால், பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் நாள்தோறும் உருவாகி வருகின்றன.

எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு இந்த அளவுக்கு இல்லை. ஆனால் இன்று 15, 16 வயதுடைய பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே கூட போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் தாக்கமே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த நிலையை மாற்றுவதற்காக விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு மைதானங்களை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதையும் படிங்க: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கட்டுப்பாட்டில் உள்ள மைதானங்கள் மட்டுமல்லாமல், மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள விளையாட்டு மைதானங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து மைதானங்களிலும் உயர் மின்விளக்குகள் (Flood Lights) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமின்றி, விளையாட விரும்பும் அனைவரும் மைதானங்களை பயன்படுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் அதிகளவில் மைதானங்கள் இல்லாவிட்டாலும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாநகராட்சிகளின் கீழ் ஏராளமான மைதானங்கள் உள்ளன. இந்த மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து, எந்தெந்த இடங்களில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன என்பது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது விளையாட்டு மைதானங்களையும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் எந்த விளையாட்டிற்காக எந்த இடத்தில் மைதானங்கள் உள்ளன, எங்கு பயிற்சி வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை ஒருங்கிணைத்து பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் தளம் உருவாக்கப்பட உள்ளது.

ஏனெனில், தங்களது மகன் அல்லது மகளை தடகள வீரராகவோ, கால்பந்து வீரராகவோ, பேஸ்பால் வீரராகவோ உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கு, அதற்கான மைதானங்கள் எங்கு உள்ளன, பயிற்சி மையங்கள் எங்கு செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் எளிதில் கிடைப்பதில்லை.

அதேபோல், விளையாட விரும்பும் இளைஞர்களுக்கு போதுமான மைதான வசதிகளும், இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய ஒளிவசதிகளும் இல்லாதபோது, அவர்கள் தங்களது நேரத்தை பயனுள்ள செயல்பாடுகளில் செலவிட முடியாமல் போகிறது. இதன் விளைவாக சிலர் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கங்களுக்கு அடிமையாகும் அபாயம் ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் எங்கெல்லாம் விளையாட்டு மைதானங்கள் உள்ளனவோ, அவற்றை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் தவெக குரல் ஒலிக்கப் போகிறதா? ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share