அதிமுகவுடன் இணைந்து திமுக ஆட்சி அமைக்க திட்டம்? அத்தனை எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்ய ரெடி! - நிர்மல்குமார்!
திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அதற்கான அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினர் இணைந்து ஆட்சியை அமைப்பதற்காக தினமும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக தனியாக ஒரு குழுவே செயல்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "தமிழக மக்கள் விஜய் முதல்வராக வேண்டும் என்ற விருப்பத்துடன் வாக்களித்துள்ளனர். ஆனால் அந்த மக்கள் தீர்ப்பை மாற்றும் நோக்கில், பணம் மற்றும் அரசியல் அழுத்தங்களை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சட்டசபையில முதல்வர் விஜய் இன்னும் டான்ஸ் மட்டும் தான் ஆடல!! கேள்விகளுக்கு பதில் இல்லை என உதயநிதி ஆவேசம்!
தொடர்ந்து பேசிய அவர், "பல கட்சிகளை உடைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட தங்களது கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு யார் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்" என்றார்.
அதேபோல், "திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத வகையில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன. தற்போது கூட இதுபோன்ற செயல்கள் தொடர்கின்றன" என்றும் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார்.
மேலும், "திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் சம்மதிக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் சிலர் ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இன்று ஆட்சியை அமைப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் நாளை மக்களை எப்படி சந்திப்பார்கள் என்பதே முக்கிய கேள்வி" என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல் குமார் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக அல்லது அதிமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!