×
 

தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!

தமிழக அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரும் அமைச்சர் பதவி கேட்பது, கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் அமைச்சர் பதவி கேட்டு அழுத்தம் கொடுத்து வருவது கட்சி மேலிடத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் தவெக அரசுக்கு ஆதரவு கடிதம் வழங்கியிருந்தனர். இதையடுத்து கூட்டணி சமநிலையை கருத்தில் கொண்டு காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்க முதலமைச்சர் விஜய் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலரும், தலித் சமூகத்தை சேர்ந்தவருமான விஸ்வநாதனுக்கும், சட்டசபை காங்கிரஸ் தலைவரும் நாடார் சமூகத்தை சேர்ந்தவருமான ராஜேஷ்குமாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தள்ளுமுள்ளு! கோபத்தில் ராகுல்காந்தி எடுத்த அதிரடி முடிவு!

ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் மீனவர் சமூக பிரதிநிதித்துவ அடிப்படையில் தனக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பெண் எம்எல்ஏ தாரகை கத்பட் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஜமால் முகமது யூனுஸ் மற்றும் கிறிஸ்துவர் பிரதிநிதித்துவ அடிப்படையில் பிரவீனும் அமைச்சர் பதவி கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்ற விவகாரத்தில் மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை ஐந்து எம்எல்ஏக்களும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவருக்கும் ராகுல் வாழ்த்து தெரிவித்தாலும், அமைச்சர் பதவி விவகாரத்தில் எந்த உறுதியும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் திமுகவுக்கு செல்லும் மனநிலையில் இரண்டு எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, கட்சி மேலிடம் அவர்களை ஒரே ஹோட்டலில் தங்க வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே கூட்டணி அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பதவி போட்டி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share