பாஜகவின் சி டீம் ஆன விஜய், வயிறெரியும் எடப்பாடி பழனிசாமி - போட்டுத்தாக்கிய அமைச்சர் ரகுபதி..!
ஒன்றிணைவோம் தமிழ்நாடு என்பது,திமுகவுக்கு மட்டுமின்றி தமிழ்நாடு மக்களுக்கே முதலமைச்சர் தந்துள்ள சிறந்த திட்டம் என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஒவ்வொரு வீடு தோறும் திமுக நிர்வாகிகள் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் இந்த ஆட்சியின் பயன்கள் குறித்து கேட்டறிந்து நீங்கள் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டு அதன் பின்பு ஓடிபி எண்ணை பெற்று அதற்குப் பிறகு அவர்களை உறுப்பினராக சேர்க்கும் திட்டம் தானே தவிர இது போலி உறுப்பினர் சேர்க்கும் திட்டமல்ல.
ஒவ்வொருவரும் மனம் உகந்து அரசின் பல்வேறு சாதனைகளை உணர்ந்து எங்களையும் திமுகவில் இணைத்துக் கொள்ளுங்கள் நாங்களும் ஸ்டாலினுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்காக பங்காற்ற விரும்புகிறோம் என்று கூறி மக்கள் தங்கள் இணைத்துக் கொள்ளும் திட்டமாக இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு இயக்கத்திற்கும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதற்கான தைரியம் வேண்டும் என்றார்.
ஒரே இடத்தில் இருந்து கொண்டு உறுப்பினர்களை சேர்ப்பது அந்த இயக்கத்திற்கு பலவீனம். எங்களிடம் பலம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி போல இது பலவீனமான திட்டமல்ல.அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகின்ற காரணத்தினால், பரிதாபத்திற்குரிய பழனிச்சாமி எங்கள் திட்டத்தை விமர்சித்துள்ளார்.
மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆட்சியோட திட்டங்களே சான்று. அதனை எடப்பாடி பழனிச்சாமியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
இதையும் படிங்க: "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...!
மகளிர் உரிமைத்தொகையை எடப்பாடி பழனிச்சாமி தர நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருக்கும்போதே கொடுத்திருக்கலாம். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் செய்ய மாட்டார். ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம். எடப்பாடி பழனிச்சாமி நான்தான் முதலமைச்சர் என் தலைமையில் கூட்டணி என்கிறார். ஆனால் பாஜக தலைமை பேசி முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். அங்கு முரண்பாடு அவ்வளவு உள்ளது.
ஒரு குடும்பத்தில் துக்கம் நிகழ்ந்து விட்டது என்றால் அங்கு வருத்தம் தெரிவிப்பது மனிதாபிமானம், தன்னுடைய கட்சிக்காரர் தவறு செய்தாலும் தண்டனையை தரக்கூடிய முதலமைச்சர்தான் எங்கள் முதலமைச்சர் . பாஜவின் சி டீம் விஜய் என்று முதன் முதலில் நான் தான் சொன்னேன். இப்போதும் நான் அதைத்தான் சொல்கிறேன். பாஜகவின் சி டீம் தான் விஜய், அவர்களைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: அராஜக ஆட்சிக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு! கொந்தளித்த நாயனார் நாகேந்திரன்..!