”அமித் ஷா வாயாலேயே வாய் சுடுபவர்”... தொகுதி மறுவரையறை குறித்து முக்கிய பாயிண்ட்டை பிடித்த ரகுபதி...!
மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி தேவையான ஒரு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வந்து அதன் மூலமாக ஏதாவது ஆதாயம் தேடலாமா என்று அவர்கள் பார்க்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா உள்ளிட்ட மூன்று சட்ட மசோதா தோல்வியடைந்தது குறித்து புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: முதல் வெற்றியாகப் நாடாளுமன்றத்திலே வெற்றி கிடைத்திருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்கின்ற பெயரிலே தமிழ்நாட்டின் உரிமைகளை நசுக்க நினைத்த பாஜக கொண்டு வந்த தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு 352 வாக்குகள் இல்லை என்று தெரிந்தும் வேண்டுமென்றே பாஜக இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி அவர்களுக்கு வேண்டும்.
ஆனால் அவர்களுக்கு இருப்பது சிங்கிள் மெஜாரிட்டி தான். அதுவும் நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரிக்கிறதால்தான். அந்த சிங்கிள் மெஜாரிட்டி, இல்லாவிட்டால் ஆட்சியே கிடையாது. எனவே மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி தேவையான ஒரு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வந்து அதன் மூலமாக ஏதாவது ஆதாயம் தேடலாமா என்று அவர்கள் பார்க்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மக்களும் பாஜகவின் கபட நாடகத்தை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.
தொகுதி மறுவரையறை என்பது வேறு, மகளிர் இடஒதுக்கீடு என்பது வேறு, இரண்டையும் சேர்த்து குழப்பி மக்களைக் குழப்புவதற்காகப் பார்த்தார்கள். நாம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சரியாக அமல்படுத்தி இருக்கிறோம். அதாவது அரசாங்கத்தினுடைய ஒரு சட்டத்தை அமல்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களுக்குத் தண்டனை தருகின்ற செயலை இன்றைக்கு ஒன்றிய அரசு செய்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு கிடைத்தது கிரீன் சிக்னல்... நாளைய விடியலுக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள்... !
1952-லே நம்முடைய நாடாளுமன்ற இடங்கள் 42. இப்பொழுது நம்முடைய இடங்கள் 39. மக்கள் தொகை கட்டுப்பாட்டைக் குறைத்ததால் நமக்குக் கிடைத்திருக்கிற பரிசு, ஒன்றிய அரசு தந்திருக்கிற பரிசு. இனிமேல் சட்டங்கள் போட்டால் அதைக் கடைபிடிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசு புத்தி சொல்லியிருக்கிறது. எனவே எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றோம்.
தொகுதி மறு வரையறை வரவேண்டும், தொகுதி மறுவரை வரவேன்பது எப்பொழுதுமே 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துவிட்டு நீங்கள் செய்யுங்கள் என்றுதான் சொல்லுகிறோம்.
பல்வேறு கட்சிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும், அதுவும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையெல்லாம் வைத்திருக்கின்றன. எனவே நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து எடுக்க இந்திய அரசால்தான் முடியும்.
ஏனென்றால் இங்கே இருக்கக்கூடிய யாதவர்கள் பீகாரிலும் இருக்கிறார்கள், மற்ற மாநிலங்களிலும் இருக்கிறார்கள். அதேபோல இங்கே சேர்த்து இருக்கக்கூடிய நாயுடு போன்றவர்கள், ரெட்டியார் போன்றவர்கள், இவர்கள் எல்லாம் பிற மாநிலங்களிலும் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதேபோல 24 மனை தெலுங்குச் செட்டியார்களை எடுத்துக்கொண்டால் பல ஜாதியினர் ஒரு இரண்டு மூன்று மாநிலங்களில் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதேபோல பல மாநிலங்களில் இருக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசு எடுத்தால்தான் சரியாக இருக்கும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. அதை நாங்கள் வலியுறுத்தினாலும் கூட, இன்றைக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்களே தவிர அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் தொகுதி மறுவரை, தொகுதி சீரமைப்பு என்கின்ற பெயரிலே மகளிர் மசோதாவை இடையிலே புகுத்தி அதன் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு ஏதாவது கெட்ட பெயரை வாங்கித் தந்துவிட முடியுமா என்று ஒரு தப்பு கணக்கை இன்றைக்கு பாஜக போட்டிருக்கிறது.
நிச்சயமாக நாங்கள் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிரிகள் அல்ல. ஆனால் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்குக் கொடுப்பதிலே திமுக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அதை ஒழுங்காகக் கணக்கெடுப்பு நடத்திக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அதே நேரத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அதாவது குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியதற்காக எங்களுக்குத் தண்டனை தரக்கூடாது. அன்றைக்கு இருந்த நிலவரப்படிதான் தரவேண்டும். இல்லையென்றால் இனி எதிர்காலத்திலே ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தச் சட்டத்தையும் யாருமே மதிக்க மாட்டார்கள். நம்ம சட்டத்தை மதித்தால் பாதிப்பு நமக்குத்தான் என்கின்ற உணர்வு அவர்களுக்கு வந்துவிடும். எனவேதான் இதை எதிர்த்து இன்றைக்கு வாக்களித்து அதன் மூலமாக அந்த சட்ட மசோதாவை நியாயப்படி முறியடித்திருக்கிறோம். இந்திய மக்களுடைய நலனிலே அக்கறை கொண்டு எங்களுடைய தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறார்.
எடப்பாடிக்கு இப்ப என்ன பேசுறது, எது பேசுறதுன்னே ஒன்னும் தெரியல. எப்ப பாரு தூங்காமலே பேசிக்கொண்டே போறாரு. பஸ்ல போகும்போது கூட தூங்காம இருக்காருன்னு நினைக்கிறேன். அதனால அவர் வந்து என்ன சொன்னாலும் அது உளறல். எடப்பாடியினுடைய உளறல்களுக்கெல்லாம் நம்ம பதிலளிக்க வேண்டியதில்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுக எனவே நாங்கள் வந்து என்றைக்குமே பெண்களுக்கு துரோகம் செய்யவே மாட்டோம். ஏன்னா பெண் வாக்காளர்கள் தான் எங்களுடைய இன்றைக்கு வாக்கு வங்கி. அந்த வாக்கு வங்கியில் கையவைப்பதற்காக இப்படி ஒரு சதிச்செயலை அவர்கள் செய்தாலும் கூட தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக, பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நம்ப மாட்டார்கள்.
இந்த சட்டத்தை அவசரமாக கொண்டு வந்ததின் நோக்கமே தேர்தல் நடக்கிற நேரத்திலே இந்த சட்டத்தை கொண்டு வரவேண்டிய அவசியமே கிடையாது.
ஆனால் அவசரமாக கொண்டு வந்ததே இந்த தேர்தல் நடக்கிற மாநிலங்களில் இருக்கக்கூடிய கட்சிகள், அது கேரளாவா இருந்தா... அது கேரளா முடிஞ்சு போச்சு. தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விடலாமா என்கின்ற கண்ணோட்டத்திலே அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த பிரச்சனையும் அவர்கள் கிளப்ப முடியாது. ஏனென்றால் நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்த்து குரல் கொடுத்து, கருப்புக்கொடி ஏந்தி எல்லாரும் அதை எதிர்க்க வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும், இது தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று குரல் எழுப்பிருக்கிறோம். எனவே எங்களை வந்து தமிழ்நாட்டு மக்களிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது, எங்கள் தலைவரை பிரிக்க முடியாது.
59 தொகுதிகள் என்று அதை எழுத்துப்பூர்வமாக எழுதியே தரலையே. சொல்றது வாயால... அமித் ஷா வாயால சொல்றது என்னைக்காச்சும் செஞ்சிருக்காரா? வாயால வடை சுட்டுட்டு போய்டுவாரு, ஏமாத்திடுவாரு. அவர் வந்து இட ஒதுக்கீடு மசோதாவால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு வராது என்று இங்க வந்து சொல்லுவார். உத்தரப்பிரதேசத்துல போயி அல்லது பீகார்ல போயி இட ஒதுக்கீடு வந்து உங்களுக்கு சாதகமா இருக்குன்னு சொல்லுவார். அதனால் அவர் இடத்துக்கு தகுந்தாற்போல் பேசுகின்றவர்கள் நாங்கள் அல்ல. அது ஒரு பச்சோந்தித்தனம். அங்கங்க நிறம் மாறுறது. நாங்கள் நிறம் மாறுகின்றவர்கள் அல்ல. நாங்கள் எப்போதுமே ஒரே நிறத்தில், ஒரே கருத்தில், ஒரே நிலைப்பாடு கொண்டவர்கள்.
அமித்ஷாவின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்பது தான் கொத்தடிமை, எழுதி கொடுத்தாச்சு சாசனம். அவரைப் பத்தி பிரச்சனை இல்லை. அதிமுக இன்றைக்கு தங்களுடைய டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்வதற்கு வேண்டிய முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். 59 தொகுதிகள் என்று எழுதி தரட்டும் அப்புறம் பார்ப்போம். அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்புறம் சித்தப்பான்னு கூப்பிடலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கோர விபத்து... 8 பேர் உடல் சிதைந்து பலி... நடுவானில் நடந்து என்ன?