“யாரா இருந்தாலும் சரி...” - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கொடுத்த கடைசி வார்னிங்...!
இந்துச் சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கோயில் அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இந்துச் சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த ஆய்வுகளின் போது, பக்தர்கள், கோயில்களுக்கு வெளியே கடை நடத்தும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் முக்கியமான சில அறிவுறுத்தல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்துச் சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோயில் நிர்வாகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில், கோயில்களில் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. லஞ்சம், நிதி முறைகேடு, நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட எந்தவொரு தவறும் கண்டறியப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக, கோயில் நிலங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் முயற்சிகள் எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு இன்ச் கோவில் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்... கலர் கலரா ரீல் சுத்துறாங்க..! அமைச்சர் ரமேஷ் பேட்டி..!!
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு சம்பவங்கள் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக, கோயில்களைச் சார்ந்த வழக்குகள் விசாரணைக்கு வரவிருந்தால், அதன் முழு விவரங்களும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பே அமைச்சர் மற்றும் ஆணையருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான சேவைகள் குறித்து, அனைத்து கோயில்களிலும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க, சீரான தரிசன ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகும் சூழல் உருவாகக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினசரி கண்காணிப்பு தொடர்பாக, அனைத்து அதிகாரிகளும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோயில்களை நேரில் ஆய்வு செய்து, நிர்வாகம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். முக்கிய பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளைத் தடுக்கத் தவறுவது, தகவல்களை மறைப்பது அல்லது அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வராமல் இருப்பது கடுமையான அலட்சியமாகக் கருதப்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடியாக கடுமையான துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!