மாற்றத்துக்கு தயாராகும் மத்திய அமைச்சரவை!! பிரதமர் மோடி சீக்ரெட் ஸ்கெட்ச்! மே 21 ப்ளான்!
அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்புக்கு மத்தியில், மே 21ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பான யூகங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மே 21ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் தனிப் பொறுப்பு இணை அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான 3.0 அமைச்சரவையின் விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. அரசு திட்டங்களின் செயல்பாடு, மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. மேலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவுகளும் இதில் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைச்சரவை மாற்றத்துக்கு அடிப்படையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அசாம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சம உரிமை கொடுங்க முதல்வரே..! கட்டணமில்லா பேருந்து, உரிமைத்தொகை..! திருநங்கைகள் கோரிக்கை..!
ஆனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக தோல்வியை சந்தித்தது. கேரளாவில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை. இந்த முடிவுகளின் அடிப்படையில் பல மாநிலங்களில் இருந்து அமைச்சர்களுக்கு இடமாற்றம் அல்லது புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்படலாம் என்றும், அல்லது மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவுகின்றன.
மாநிலத் தலைவர் பதவியில் இல்லாத போதும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்த அண்ணாமலையின் உழைப்பை பாராட்டும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் இந்த அமைச்சரவை கூட்டம், அடுத்தக்கட்ட அரசியல் மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகளை சரியாக பகுப்பாய்வு செய்து, பலவீனமான பகுதிகளை வலுப்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 21ம் தேதி கூட்டத்துக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் தமிழக அரசியல் உள்ளிட்ட பல மாநில அரசியல் சூழலையும் பாதிக்கும் என்பதால், அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரே தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்... விஜய்க்கு விசிக ரவிக்குமார் பகிரங்க எச்சரிக்கை...!