மோடி வரும்போது முடிஞ்சிருக்கணும்!! ஸ்டாலின் திட்டவட்டம்! தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக மும்முரம்!
பிரதமர் மோடி புதனன்று தமிழகம் வர உள்ளார். அதே நாளில், தங்கள் கூட்டணியை இறுதி செய்ய, தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தமிழகம் வருகை தர உள்ள நிலையில், அதே நாளில் தி.மு.க. தலைமை தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை அடுத்தடுத்து அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இது திருச்சியில் நடைபெறவுள்ள தே.ஜ.கூ. பொதுக்கூட்டத்துக்கு எதிராக தி.மு.க.வின் அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ., ஆதி தமிழர் பேரவை ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்! பறி போகிறது பழைய கட்சிகளின் சீட்! தலை சொறியும் தலைமை!
புதிதாக கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வுக்கு 8 தொகுதிகள் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் கொடுத்தது போல 6 தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளது.
ஆனால் ம.தி.மு.க. தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதால், அவர்களுக்கு சீட் குறைக்கப்படும். அந்த குறைந்த சீட் விசிக் அல்லது மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீட்டுக்கு பெரும்பாலான கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ம.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் மட்டும் இன்னும் முழுமையான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இன்று (செவ்வாய்) மாலைக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 74 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தி.மு.க. 160 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதால், தி.மு.க.வின் நேரடி போட்டி இடங்கள் 172 வரை உயர வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் 188 இடங்களில் உதயசூரியன் சின்னம் இருந்த நிலையில், இம்முறை அதிக கட்சிகள் இருப்பதால் இது தவிர்க்க முடியாதது.
கூட்டணி கட்சிகளுக்கு முழு திருப்தி இல்லாத நிலையில், தி.மு.க. தலைமை வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2029 லோக்சபா தேர்தலில் அதிக வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளை வழிக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது.
பிரதமர் மோடியின் திருச்சி பொதுக்கூட்டத்துக்கு எதிரொலியாக, அதே நாளில் கூட்டணி தொகுதி பங்கீட்டை அறிவிப்பதன் மூலம் தி.மு.க. அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: 15 நாள்தான் டைம்!! கூட்டணி பேச்சுவார்த்தையை முடிங்க!! மார்ச் -8 எல்லாரும் மேடையேறணும்! ஸ்டாலின் கறார் கண்டிஷன்!