பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!
விஜய்யின் கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு கொடுப்பது சுயநலமாக இருக்கிறது. பணம் கொடுப்பது மட்டும் லஞ்சமல்ல; தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுப்பதும் லஞ்சம்தான்
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய நடவடிக்கை அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த நடவடிக்கையை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் வழங்கினார்.
கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சாந்தி என்பவருக்கு அரசுப் பணிக்குப் பதிலாக கருணைத்தொகை அடிப்படையில் ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக கொடி கட்டிய காரை ஏற்றி சிறுமியைக் கொல்ல முயற்சி?!! விருதுநகரில் பரபரப்பு!! விளாசிய நயினார் நாகேந்திரன்!
இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாரிசுகளுக்கு வேலைகொடுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. படித்து தேர்வு எழுதி பலர் உள்ளனர். அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். இவர்களுக்கு கொடுத்தது தவறில்லை, ஆனால் முன்னுரிமை அடிப்படையில் கொடுத்திருக்க வேண்டும். விஜய்யின் கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு கொடுப்பது சுயநலமாக இருக்கிறது. பணம் கொடுப்பது மட்டும் லஞ்சமல்ல; தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுப்பதும் லஞ்சம்தான்.” எனத் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய முடிவு மனிதாபிமான நடவடிக்கையா அல்லது முன்னுரிமை நடைமுறையை மீறிய செயலா என்ற விவாதம் தற்போது அரசியல் அரங்கில் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர்! நயினார் விளாசல்!